மருத நாயகத்தை உண்மையிலேயே தூசு தட்டுகிறாரா கமல்?
சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாஸன் தொடங்கி கைவிட்ட மருதநாயகம் படத்தை மீண்டும் தூசு தட்டப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய சரித்திரப் படம் இது.

பிரிட்டிஷ் ராணி
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக அறிவித்து, பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் கையால் தொடங்கி வைக்கப்பட்ட படம் இது. சிவாஜி கணேசன், ரஜினி, இளையராஜா என திரையுலகமே கலந்து கொண்டது இந்த தொடக்க விழாவில்.

ரூ 50 கோடி
அன்றைக்கு ரூ 50 கோடி தேவைப்பட்டது இந்தப் படம் தயாரிக்க. 1997-ல் இது மிகப் பெரிய பட்ஜெட். நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கைவிரித்த பைனான்சியர்கள்
படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்தப் படத்தை தயாரிக்கும் அளவு சூழல் உருவானதும் மீண்டும் படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

விஸ்வரூப வெற்றி
தற்போது 'விஸ்வரூபம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார்.

மீண்டும் மருதநாயகம்
விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம்.
எனவே, லிங்குசாமி படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.

15 ஆண்டுகளாக..
கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு அடிக்கடி கிளம்புவது வழக்கம். கமலும் இதை மறுப்பதில்லை. கடந்த முறை இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார், கமல் இயக்குவார் என்றெல்லாம் பேச்சு கிளம்பியது. பின்னர் அதை கமலே மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











