ஸ்ட்ரைக் சீக்கிரம் முடிய வழி பாருங்க! - விஷாலுக்கு கமல் அட்வைஸ்
தனியார் டிஜிட்டல் சேவை அளிக்கும் நிறுவனங்களின் கட்டண உயர்வு காரணமாக மார்க் 1 முதல் புதிய படங்களை ரீலீஸ் செய்ய வேண்டாம் என தன் உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டிருந்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதற்கிடையில் டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான முறையில் எந்த பேச்சுவார்த்தைளும் நடக்கவில்லை.

புதிய படங்கள் வராததால் தியேட்டர்கள் காலியாகின, தியேட்டர் உரிமையாளர்கள் முறைப்படி என்ன பிரச்சினை என கேட்டு பேச்சுவார்த்தை நடத்த தங்களை தேடி வருவார்கள் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது.
கேளிக்கை வரி ரத்தாகிற வரை தியேட்டரை மூடுவது என அறிவித்துவிட்டார்கள்.
தங்கள் வேலை நிறுத்தத்தை உறுதிப்படுத்தி, பலப்படுத்த விரும்பிய விஷால் மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்து வைப்பது என எடுத்த முடிவு பல தரப்பிலும் அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளன.
அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் நடித்து வரும் படங்களின் சூட்டிங் பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான முதல் முடக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விஷாலிடம் பேசி பிரயோசனமில்லை. என்பதை உணர்ந்த முன்னணி தமிழ் படதயாரிப்பாளர்கள் நடிகர்கள் ரஜினி, கமலிடம் முறையிட முடிவு செய்தனர். ரஜினி ஊரில் இல்லை. கமல்ஹாசனிடம் முறையிட்டுள்ளனர்.
படம் திரையிடுவதில் தனியார் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையில் மொத்த இண்டஸ்ட்ரியும் முடக்குவது எந்த வகையில் நியாயம். குறிப்பாக படப்பிடிப்பை நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை என்பது கமல் நிலைப்பாடாம்.
இதை அறிந்த விஷால் வேலை நிறுத்தத்துக்கு எதிராக கமல் ஏதேனும் பேசி விட்டால் சங்கம் பலவீனமாகிவிடும் என்பதால், உடனடியாக கமல்ஹாசனை சந்தித்து தயாரிப்பாளர் சங்கத் தரப்பை விளக்கமாகக் கூறியதுடன், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை ஏற்பட்டு தலைமைக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்றாராம்.
ரஜினி, விஐய், அஜீத் மட்டுமே சினிமா துறை அல்ல என்பதை சுற்றி வளைத்து விரிவாக விஷால் விளக்கம் கூறியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கமல், படப்பிடிப்பு தொடர முதலில் வழி பண்ணுங்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அனுப்பினாராம். கமல் வார்த்தைக்கு என்ன பலன் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
- நமது நிருபர்


Click it and Unblock the Notifications











