Robo Shankar: எச்சரித்த கமல்.. பொத்திப் பொத்தி பார்த்துக் கொண்ட பிரியங்கா.. ஆனாலும் ஏமாத்திட்டாரே ரோபோ
சென்னை: ரோபோ சங்கரின் மரணம் ரசிகர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் இருக்கும் துக்கத்தைக் காட்டிலும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துக்கம் அளவிடமுடியாதது. அந்த குடும்பத்தின் ஆணிவேர். மதுரையின் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்த சங்கர், தனது திறமையால் மட்டுமே ரோபோ சங்கராக உயர்ந்தார். மிகவும் எதார்த்தமான வெள்ளந்தியான மனிதன் என அவருடன் பழகிய அனைவரும் கூறுகிறார்கள். அண்மையில் அவர் மகள் மீது சில விமர்சனங்கள் வந்தபோது கூட, அண்ணன் ரோபோ சங்கருக்காக அதிகம் விமர்சிக்காமல் இருக்கிறோம், இந்திரஜா இனிமேலாவது இது போல செய்யக்கூடாது என்று குறிப்பிட்ட பல இணையவாசிகள் உள்ளார்கள்.
அந்த அளவுக்கு தனக்கென சமூகத்தில் தனி மரியாதையை உருவாக்கிக் கொண்டவர். துக்கம் விசாரிக்கச் செல்பவர்கள் எல்லாம், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவையும், மகள் இந்திரஜாவையும் நேருக்கு நேர் பார்த்து ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகளற்று, மௌனமாக நிற்பதை ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் பார்க்க முடிகிறது. ரோபோ அதி தீவிரமான கமல் ரசிகர். இதைத் தெரிந்து கொண்ட கமல்ஹாசன் ரோபோ சங்கர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தனி அக்கறை காட்டி வந்தார்.

ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு வந்த பின்னர், கமல்ஹாசனிடம் தொலைபேசியில் பேசுகையில், அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். அதற்கு ரோபோ சங்கரோ, நான் சரியான நேரத்திற்கு உணவு, சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகள், ஓய்வு என்பதைப் பின்பற்றி வருகிறேன் சார் என்று கமலிடம் உறுதியும் அளிக்கிறார். மேலும் குடும்பத்தினர் தன்னை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.
கமல் எச்சரிக்கை: அதே அழைப்பில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா பேசுகையில், " சார், நான் நன்றாக பார்த்துக் கொண்டுதான் சார் இருக்கிறேன். டாக்டர்கள் சொன்னதை சரியான பின்பற்றி வருகிறேன் என்று கூறுகிறார். உடனே கமல்ஹாசன், டீ, காபி கூட கொடுக்க வேண்டாம். அவர் ஆசைப்படுகிறார் என்று கொடுத்தால் அது பெரிய சிக்கலில் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்று கூறுகிறார். இந்த போன் கால் என்பது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணத்திற்கு முன்னர் பேசப்பட்டது. அந்த அழைப்பில், நீங்கள் சொல்லும் தேதியில் தான் எனது மகளுக்குத் திருமணம் என்றும் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஞ்சலி: இப்படி இவரது உடல் நலனில் அவரது குடும்பத்தாரைக் கடந்து பலரும் அக்கறை கொண்டிருந்தார்கள். அவரது மனைவி பிரியங்கா பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் ரோபோ சங்கர் அனைவரையும் ஏமாற்றி விட்டார். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், சக மனிதனாக அவர் பலரிடத்திலும் அன்பு பாராட்டியுள்ளார். அண்மையில் இசைஞானிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மெல்ல மெல்ல நடந்து சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜாவின் கால்களைத் தொட்டு வணக்கிவிட்டு வந்த வீடியோவைப் பார்க்கும் போது கண்கள் கலங்காமல் இல்லை. இந்நிலையில் கமல்ஹாசன் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அப்போது ரோபோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications











