Rajini - Kamal: ஆண்டவரே சொல்லிட்டாரு.. சூப்பர் ஸ்டாரோடு நடிப்பது உறுதி.. லோகி ப்ரோ We Are Waiting!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் கடந்த சில வாரங்களுக்கு மேலாகவே திரைத்துறையில் ஓடிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் சைமா 2025 விருதுகள் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் உடன் தான் இணைந்து படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் சில தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கி அதில் பல நட்சத்திரங்களை ஒன்றாக நடிக்க வைத்து வருகிறார். இது தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவுக்கே புதிதான விஷயம். இப்படி இருக்கையில் இவர் தமிழ் சினிமாவில் அடுத்து செய்யவுள்ள சம்பவம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் என இருவரையும் ஒரே படத்தில் இயக்கப் போகிறார் என்பதுதான்.

46 ஆண்டுகளுக்கு பின்: இருவரும் கடைசியாக கடந்த 1979 ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி வெளியான படமான நினைத்தாலே இனிக்கும் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. அதை ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாகவே கொண்டிருந்தார்கள் என்று கூறலாம். இதுவும் ஒரு வகையில் சினிமாவிற்கு வணிக ரீதியாக பயனுள்ளதாக இருந்தது. இப்படி இருக்கும்போது இருவரும் மீண்டும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இது தொடர்பான தகவல்கள் சினிமா உலகில் அரசல் புரசலாக வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது அதை உறுதி ஆக்கியுள்ளார் கமல்ஹாசன்.
கமல் - ரஜினி: அதாவது சைமா 2025 விருதுகள் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது அவரிடம் ரஜினியுடன் அவர் இணைந்து நடிப்பது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். அதாவது, நானும் அவரும் தொழிலாகத்தான் பிரிந்துள்ளோம், மற்றபடி எங்களுக்குள் பிரிவு இல்லை. இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம். அது தரமான சம்பவமாக இருக்குமா இல்லையா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும், முதலில் இருவரும் ஒரு பிஸ்கட்டை பிரித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம், அதன் பின்னர் இருவரும் முழு பிஸ்கட் வேண்டும் என்றோம், இப்போது மீண்டும் பாதி பிஸ்கட் போதும் என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: கமல்ஹாசன் தெரிவித்துள்ள இந்த தகவலால் மொத்த தமிழ் திரையுலகமும் மகிழ்ச்சியில் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசனும் அன்பறிவ் மாஸ்டர்களின் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கைதி 2 படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும்போது கமல் - ரஜினி நடிக்கும் படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் தான் தொடங்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











