புரூஸ் லீக்கு நினைவு தினம்... காஞ்சிபுரத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்!

என்டர் தி ட்ரேகன், பிஸ்ட் ஆஃப் பியூரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், அவற்றின் மூலமே உலகப் புகழ் பெற்றவர் புரூஸ் லீ.
40 ஆண்டுகளுக்கு முன் தனது 32 வது வயிதில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கமும், கொல்லப்பட்டு விட்டார் என்றும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன இன்னமும்.
அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பல ஆயிரம் மக்கள் அவர் பிறந்த ஹாங்காங்கில் கூடி மரியாதை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் அவருக்கு பிரமாண்ட வெண்கலச் சிலை நிறுவப்பட்டது ஹாங்காங்கில்.
பிறந்த ஊர் தவிர, உலகின் மற்ற நாடு நகரங்களிலும் புரூஸ் லீக்கு உள்ள ரசிகர்கள் இன்னும் அவரை நினைவில் வைத்துப் போற்றி வருகின்றனர்.
மற்ற நாடுகளைவிட, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் புரூஸ்லீக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். சென்னை போன்ற நகரங்கள் மட்டுமல்ல, காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களில் கூட புரூஸ்லீக்கு ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜூலை 20-ம் தேதி அவரது நினைவு நாளை கொண்டாடியுள்ளனர்.
இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள் அடித்து ஒட்டி புரூஸ் லீக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம் நடத்தும் பலரும் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











