விவசாயிகளை அப்படி அவமதிப்பதா? பிரபல நடிகை கங்கனா ரனவத் மீது கிரிமினல் வழக்கு!
பெங்களூரு: விவசாயிகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கங்கனா ரனவத் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர், இந்தி நடிகை கங்கனா ரனாவத்.
இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார்.

கங்கனாவின் பங்களா
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்களை நடிகை கங்கனா விமர்சித்து வருகிறார். இதனால், சிவசேனா அரசுக்கும், நடிகை கங்கனா ரனவத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் பங்களா, சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது என்று கூறி, அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

இழப்பீடு கோரி
இதை எதிர்த்த கங்கனா, 2 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளை அவமதித்ததாக கங்கனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகள் பற்றி கங்கனா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

வேளாண் மசோதா
அதில், உண்மையில் தூங்கினால் விழித்துக் கொள்ளலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. வேளாண் மசோதா குறித்து அறியாதவர்கள் பாசாங்கு செய்கின்றனர்' என்று கூறிய அவர், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடுபவர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு இருந்தார்.

நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க கோரி, கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், கங்கனா கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிமினல் வழக்கு
இதுதொடர்பாக கர்நாடகா போலீஸ் டைரக்டர் (டிஜிபி) மற்றும் மற்றொரு மூத்த அதிகாரிக்கு கடந்த 22 ஆம் தேதி புகார் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுவை நீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணை விரைவில் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











