சவால் விட்ட கங்கனாவுக்கு சரமாரி பாதுகாப்பு.. ஷிப்ட் முறையில் 10 கமாண்டோக்கள்.. அமைச்சருக்கு நன்றி!
மும்பை: தனக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதை அடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, பாலிவுட்டை கடுமையாக சாடி வருகிறார் இந்தி நடிகை கங்கனா ரனவத்.
இவர் தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

சிறையில் இருப்பார்கள்
முதலில் சினிமா வாரிசு நடிகர், நடிகைகள் பற்றி விளாசிய கங்கனா, கரண் ஜோஹர், மகேஷ்பட் உள்பட சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை கடுமையாக விளாசினார். அவர்கள் பாலிவுட் மாஃபியா என்றும் கூறி இருந்தார். பிறகு பாலிவுட்டில் போதை மருந்துகள் இல்லாமல் பார்ட்டிகள் இல்லை என்றும் சில நடிகர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டால் சிறையில் இருப்பார்கள் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

சஞ்சய் ராவத்
இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக ட்விட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சவால் விட்டார்
மும்பை போலீசை அவமானப்படுத்தியதற்கும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் மும்பைக்கு வரக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர், மும்பைக்கு வந்தால் கங்கனா மீது தேச அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்கு கங்கனா, 9- ஆம் தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டார்.

ஒய் பிளஸ் பாதுகாப்பு
இந்த சூழலில்தான் நடிகை கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமித் ஷாவுக்கு நன்றி
இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரணாவத் நன்றி தெரிவித்துள்ளார். 'இந்த நாட்டில் யாரும் நாட்டுப்பற்றை ஒடுக்க முடியாது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











