'எனது உடல் அதற்கு செட்டாகவில்லை'... ஜான்சி ராணி படம் பற்றி கங்கனா ரனாவத்!
நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகா படத்தின் தமிழ் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.
Recommended Video

சென்னை: ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தனது உடல் உகந்ததாக இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் "மணிகர்னிகா - ஜான்சியின் ராணி". ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மணிகர்னிகா படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

நாயகி கங்கனா ரனாவத்
இந்நிகழ்ச்சியில் பேசிய நாயகி கங்கனா ரனாவத், "தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒல்லியாக இருந்தேன்
இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் ஆக்ஷன் காட்சிகள்
தினமும் 10-12 மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன்.

இயக்குனரான கங்கனா
நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது. காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்
அதே போல ராணி லக்ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











