சர்ச்சையான கருத்து.. பிரபலங்கள் கடும் கண்டனம்.. நடிகை கங்கனா சகோதரியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
மும்பை: சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக நடிகை கங்கனாவின் சகோதரி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

3 விருதுகள்
இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் சகோதரி ரங்கோலி. கங்கனாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை இவர்தான் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சை கருத்து
கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் பாஜக ஆதரவாளர்கள். ரங்கோலி, அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் நடக்கும். இந்நிலையில் இப்போது அவர் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட சமூகம்
மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காகச் சென்ற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள் தாக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கடுமையாக விமர்சித்து ட்விட் செய்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கிப் பதிவிட்டதாக, புகார் எழுந்தது.

கணக்கு முடக்கம்
இதியடுத்து சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள் அவரது ட்விட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரை அடுத்து ரங்கோலியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர், இந்த ட்வீட்டுக்காக ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

புகார் அளித்தேன்
பிரபல பாலிவுட் ஆபரண வடிவமைப்பாளர் ஃபாரா கான், 'கணக்கை முடக்கியதற்கு நன்றி. குறிப்பிட்ட சமூகத்தை அவர் தாக்கியதோடு, அவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் எனக் கூறி தன்னை நாஜிப்படைகளோடு ஒப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன்' என்று கூறியுள்ளார். மேலும் பலரும் ரங்கோலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











