ஆதாரமற்றக் குற்றச்சாட்டு.. அவதூறு புகார்.. நேரில் ஆஜராக நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்!
மும்பை: பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு புகாரில் ஆஜராக கோரி, நடிகை கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தி நடிகை கங்கனா ரனாவத். தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

ஜாவேத் அக்தர்
இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. நடிகை கங்கனா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருவதும் அது சர்ச்சைக்கு உள்ளாவதும் வாடிக்கையாக இருக்கிறது. அவர் பிரபல இந்தி
பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி பேட்டிகளில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அவதூறு கருத்து
அவர் மீது அவதூறு கருத்துக்களை கங்கனா கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை கங்கனாவுக்கு எதிராக, மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அவதூறு வழக்கை ஜாவித் அக்தர் தாக்கல் செய்தார். அவர் மனுவில், நடிகை கங்கனா, டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.

ஆதாரமற்ற கருத்து
இதற்காக நடிகை கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாவேத் அக்தர் கடந்த 55 ஆண்டுகளாக நல்ல பெயரை உருவாக்கி வைத்து உள்ளார். அவருக்கு எதிராக கங்கனா ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி அவர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றார்.

போலீசுக்கு உத்தரவு
வழக்கு விசாரணையின் போது ஜாவித் அக்தரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இந்நிலையில் ஜாவேத் அக்தரின் புகாரை விசாரித்த கோர்ட், கங்கனாவுக்கு எதிராக விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை ஜனவரி 16 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

ஆஜராக வேண்டும்
பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, இந்த அறிக்கையை தாக்கல் செய்ய பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகை கங்கனா நாளைக்குள் ஜூஹூ போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று மும்பை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











