கண்ணா லட்டு திண்ண ஆசையாவில் இந்து கடவுளை அவமானப்படுத்திய காட்சிக்கு தடை விதிக்கக் கோரி புகார்

தமிழ்நாடு இந்து மகாசபா அமைப்பு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் நடித்துள்ள கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம், சீனிவாசன் மற்றும் ஹீரோவாக நடித்திருப்பவர்கள் குடிபோதையில் கையில் லட்டை வைத்துக் கொண்டு அம்மன் சாமியிடம் இருந்து சூலாயுதம், கிரீடம், அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை பறிப்பதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதுபோல பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்து பெல்ட்டை கழற்றுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மூலம் அம்மன் சாமியையும், பெண் போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த காட்சிகளினால் இந்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்து கடவுளை அவமானப்படுத்தி படம் தயாரித்த ராமநாராயணன் மற்றும் சந்தானத்தின் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு இந்து மகாசபா நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











