தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் மூளைச்சாவு... உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு
பெங்களூரு : கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது பயங்கரமான விபத்து நேர்ந்ததில் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அறுவைச்சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்ட நிலையிலும் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற சஞ்சாரி விஜய்
கில்லிங் வீரப்பன், நதிச்சராமி உள்ளிட்ட பல கன்னட படங்களில் நடித்துள்ள சஞ்சாரி விஜய், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பல்வேறு நாடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நான் அவனல்ல அவளு படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

மூளையில் ரத்தக்கசிவு
கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய நண்பருடன் மருந்துகள் வாங்க வெளியில் சென்றபோது அவர் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவை நிறுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல் உறுப்புகள் தானம்
ஆயினும் அந்த சிகிச்சை பலனளிக்காமல் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை
இந்நிலையில் அவரது நிலை குறித்து கிச்சா சுதீப் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த லாக்டவுனில் அவர் தனக்கு சிறந்த நண்பராக மாறியதாகவும், அடுத்ததாக ரிலீஸ் ஆகவுள்ள அவரது படம் குறித்து மிகுந்த உற்சாகமாக பேசியதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











