கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை பலி
சித்ரதுர்கா: கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சோபா. அவர் 2 குழந்தைகள் உள்பட 7 பேருடன் சேர்ந்து கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகாவில் உள்ள பனஷங்கரி கோவிலுக்கு கடந்த 17ம் தேதி காரில் சென்றார்.

அவர்களின் கார் சித்ரதுர்கா அருகே சென்றபோது டிரக் மீது பயங்கரமாக மோதியது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஷோபா உயிர் இழந்தார். மேலும் அவருடன் காரில் சென்ற அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகியோரும் உயிர் இழந்தார்கள்.
காரில் இருந்த மீதமுள்ள 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பவித்ரா மற்றும் குழந்தைகளான ஸ்ரேஷ்தா, அர்தாட் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷோபா சாலை விபத்தில் பலியானது குறித்து அவர் நடித்த மகளு ஜானகி தொடரின் இயக்குநர் சீதாராம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஷோபாவின் திடீர் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரையுலகை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஷோபா சென்ற கார் டயர்களில் ஒன்று வெடித்து தான் டிரக் மீது மோதியுள்ளது. டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை ஷோபா, வியாழக்கிழமை இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரமான ஷிவ்லேக் சிங் என்று அடுத்தடுத்து இரண்டு பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











