கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்! - கபிலன் வைரமுத்து
சிங்கப்பூர்: கவியரசு கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து கூறினார்.

சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற கபிலன் வைரமுத்து பேசியதாவது:
"கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளைய தலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்.
கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது," என்றார்.
கபிலனைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் என்ற தலைப்பில் பேசினார்.
விழாவில் குழந்தைகளும் இளைஞர்களும் மேடை ஏறி கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்கள். விழா நடந்த ஐந்து மணி நேரமும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கபிலன் வைரமுத்து, முத்தையா இருவருக்கும் எழுத்தாளர் கழகம் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கியது.


Click it and Unblock the Notifications











