Blue Sattai Maran Sir Review: சார் படம் எப்படி இருக்கு? தலையில் கொட்டுடன் Good சொன்ன ப்ளூசட்டை மாறன்
சென்னை: கன்னி மாடம் படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி நேற்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் சார். விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டுள்ளார். விலங்கு வெப் சீரீஸ் மூலம் தனது சினிமா வாழ்க்கையில் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நடிகர் விமல், தொடர்ந்து கன்ட்டன்ட் ஓரியெண்டேடான படங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றார். இதற்கு முன்னர் கடந்த மாதத்தில் இவரது நடிப்பில் வெளியான போகுமிடம் வெகுதூரமில்லை படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சார் படம் குறித்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
அந்த வீடியோவில் ப்ளூ சட்டை மாறன் பேசியிருப்பதாவது, " நம் சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழவேண்டும் என்றால் ஒரே வழி அனைவரும் கல்வி கற்பது மட்டும்தான். இப்படியான கல்வியை கற்கத் தடையாக கடவுளே வந்தாலும் அந்தக் கடவுளை போட்டுத் தள்ளிவிடவேண்டும் என்ற ஆழமான கருத்தைச் சொல்ல வந்த படம்தான் சார் படம். ஒரு ஊரில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளனர். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களை கல்வி கற்கவும் அனுமதிக்க மாட்டேன் என்கின்றார்கள்.

இப்படியான ஊரில் ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுக்கின்றேன் என வருகின்றார். அவரது முயற்சியால் பல தடைகளுக்குப் பின்னர் அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி கட்டப்படுகின்றது. இதன் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கின்றார். அதன் பின்னர் அவரது மகன் சரவணன் வந்து அந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றுகின்றார். அதன் பின்னர் சரவணனின் மகன் விமல் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற முயற்சிக்கின்றார்.

கல்வியின் முக்கியத்துவம்: விமல் ஆசிரியராக பணியேற்றவுடன், கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவார் என எதிர்பார்த்தால் காதலித்துக் கொண்டு இருக்கின்றார். இந்தப் படத்தில் எதற்காக கதாநாயகி என்றே தெரியவில்லை. தேவையில்லாமல் இரண்டு பாடல்களை பாடிக்கொண்டு உள்ளது. முதலில் பொறுப்பற்றவராக இருந்த விமல், அதன் பின்னர் தனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு தீவிரமாக செயல்படுகின்றார். மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஒரு ஊருக்கு கல்வி சொல்லிக் கொடுக்கின்றது. ஆனால் அந்தக் குடும்பத்திற்கு ஒரு பிரச்னை என்றால், குடும்பத்திற்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள். அதேபோல் இவர்களால் நான் கல்வி கற்று உயர்ந்து விட்டேன் என யாருமே படத்தில் கூறவில்லை. கல்வி கற்காததால்தான் நாசமய்ப்போனேன் எனவும் யாரும் வந்து கூறவில்லை.

சொல்லப்படவேண்டிய கதை: இது மட்டும் இல்லாமல், அந்த ஊர் மக்கள் கல்வி கற்க அங்கிருக்கும் கடவுள்தான் தடையாக உள்ளது எனக் கூறி, தேவபாஷை பேசும் கடவுளைக் காட்டுவார்கள் எனப் பார்த்தால், சிறு தெய்வங்களான குல தெய்வங்களைக் காட்டிக் கொண்டு உள்ளார். படக்குழுவினரின் நோக்கம் சரியாகத்தான் உள்ளது. ஆனால் போன ரூட்டுதான் சரியில்லை. மொத்தத்தில் இந்தப் படத்தின் கதை, கட்டாயம் சொல்லப்படவேண்டிய கதைதான். ஆனால் மேக்கிங் ரசிக்கும்படியாக இல்லை" எனக் கூறியுள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











