காந்தாரா நடிகர் திடீர் மரணம்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த துயரம்.. பயத்தில் படக்குழு!
சென்னை: காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காந்தாரா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 34. உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இவரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் தான் காந்தாரா. ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, அவரே படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார். "காந்தாரா" படம் வெளியாகி சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றதைத் தொடர்ந்து, கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. கன்னட மலை பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரிஷப் ஷெட்டி அபாரமாக நடித்திருந்தார். மேலும் சப்தமி கௌடா, கிஷோர், பிரமோத் ஷெட்டி, நவீன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், 400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
காந்தாரா: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் கன்னட மலை பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை தீவிரமாக ஆராய்ச்சி செய்து முழு நீளப் படமாக ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். இப்படம் அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளதால், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்து வருகிறது.

திடீர் மரணம்: இந்நிலையில், இப்படத்தில், நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி, உடுப்பி அருகே நித்தே என்ற கிராமத்தில் உறவினர் ஒருவரின் திருமண மெகந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 34 வயதே ஆன நடிகர் ராகேஷ் பூஜாரி, 2020ஆம் ஆண்டு ஜீ கன்னட டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான கில்லாடிகலு சீசன் 3 என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆவார். அவர் இந்த படத்தில் நடித்து வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.
பயத்தில் படக்குழு: கடந்த வாரம் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகராக நடித்து வந்த, கபில் என்பவர் உயிரிழந்தார். படப்பிடிப்பின் போது, மதிய உணவு இடைவெளியில் துணை நடிகர் கபிலன், ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது. ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், அவர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் தேடி உடலை மீட்டனர். அதற்கு முன்பாக, கொல்லூரில் படப்பிடிப்பு தளத்திற்கு துணை நடிகர்களை ஏற்றி வந்த வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆனால், அந்த விபத்தில அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. கடந்த வாரம் துணை நடிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும், ஒரு நடிகர் உயிரிழந்துள்ளதால், காந்தாரா படக்குழுவினர் பயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











