இப்படி ஒரு படம் இனி சான்ஸே இல்லை.. 30வது ஆண்டில் கரகாட்டக்காரன்.. மாஸ் பண்ணிட்டீங்கப்பா!
சென்னை: இப்படி ஒரு திரைப்படம் குறிஞ்சி பூப்பதை போல அதிசயமான நிகழ்வாகத்தான் தமிழ் சினிமாவில் வெளியாகும். அப்படி ஒருபடம்தான், கரகாட்டக்காரன்.
கங்கை அமரன் இயக்கத்தில், இசை ஞானி இளையராஜாவின் தேன் சிந்தும் இசையில், அப்போதைய இளம் பெண்களின் கனவு நாயகன் ராமராஜன், கனகா, காமெடி சக்கரவர்த்தி கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான, தமிழ் சினிமா கண்ட தன்னிகரில்லா ஒரு காவியம்தான் 'கரகாட்டக்காரன்'.
1989ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதி, ரிலீசான கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு இப்போது வயது 30. படத்தின் வயதை போலவே, இப்போதும், அப்படத்தை பார்த்தாலும் ஃபிரெஷ்ஷாக, இளமையாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களை, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

திரும்ப திரும்ப ஈர்க்கும் படம்
பாட்ஷா, நாட்டாமை, சூரியவம்சம், கண்ணெதிரே தோன்றினாள், கில்லி, மங்காத்தா போன்ற படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படி ஒரு படம்தான் கரகாட்டக்காரன். இந்த படத்துல என்னதான் இருக்குது என்று சில படங்களை பார்த்து சலித்துவிட்டு வருவோம். ஆனால், இந்த படத்தில் என்னதான் இல்லை என்று கேட்க வைத்தது, கரகாட்டக்காரன். காதல், சென்டிமென்ட், பாடல்கள், காமெடி, ஆக்ஷன், விறுவிறுப்பு என, ஒரு ரசிகனை திருப்திப்படுத்தும் அத்தனை அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து, விருந்து படைத்திருப்பார் கங்கை அமரன்.
வசூல் சாதனை
இதன் காரணமாகத்தான், திரும்ப திரும்ப ரசிகர்கள், தியேட்டரை நோக்கி இழுக்கப்பட்டனர். வெற்றிகரமாக 425 நாட்கள், குடும்பங்களின் ஆதரவுடன் 485 நாட்கள் என கரகாட்டக்காரன் பட போஸ்டர்கள், சென்னை, மதுரை நகரங்களில் அலங்கரித்தன. அதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை வாரி குவித்தது கரகாட்டக்காரன். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் படங்களே அதுவரை பார்க்காத வசூலை பெற்று, பாக்ஸ்ஆபீசை அடித்து நொறுக்கியது, கரகாட்டக்காரன். நந்தனா தியேட்டரில் 385 நாட்களும் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. இத்தனைக்கும் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.35 லட்சம்தான் என்கிறார்கள்.
என்னா பாட்டு
படம் ரிலீசுக்கு, சரியாக ஒரு மாதம் முன்பாக, பாடல் கேசட்டுகள் வெளியாகின. கேசட் விற்பனையான வேகத்தை பார்த்து, கடைக்காரர்களே தலைசுற்றி விழுந்தனர். மாங்குயிலே, பூங்குயிலே பாடல் பெப் கொடுத்து பீட் ஏற்றியது என்றால், குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா.. பாடல், இன்றளவுக்கும், பிரிவுத்துயரை அனுபவிக்கும் காதலர்களுக்கு வடிகாலாக உள்ளது. பலரின் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பாடலாக இது இருப்பது சாட்சி. படத்தின் நாயகி கனகாவுக்கு அப்போது 15 வயதுதான் என்பது கூடுதல் தகவல். கரகாட்டம் ஆடுவோர் ஆபாசமாக பார்க்கப்பட்ட காலத்தில், அதை நமது பாரம்பரிய கலையாக முன்னிறுத்தி, அக் கலைஞர்களுக்கு பெரும் கவுரவத்தை கொண்டு வந்து கொடுத்தது, கரகாட்டக்காரன்.

எவர்கிரீன் கரகாட்டக்காரன்
சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா, இன்னொரு வாழைப்பழம் எங்கே என்பது போன்ற, இப்படம் எழுப்பிய சில 'வரலாற்று சிறப்புமிக்க' கேள்விகளுக்கு 30 வருடங்கள் கடந்த பிறகும், யாராலும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் மிகப்பெரிய, மர்மங்களாகவே இன்னும் அவை தொடருகின்றன. கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்கும் முயற்சிகள் இன்னும் விவாத நிலையிலேயே உள்ளன. இரு தலைமுறை ரசிகர்களையும் குஷிப்படுத்திய கரகாட்டக்காரனுக்கு இப்போது வயது 30. கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடலாம் வாங்க. இந்த திரைப்படம் தொடர்பான உங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள்.


Click it and Unblock the Notifications











