செலவுகள் விர்ர்ர்.. முதுகுவலி வேற.. தாக்குப்பிடிக்க முடியல..வேதனையில் ஊர் திரும்பிய டிவி நடிகர்!
கொச்சி: கொரோனா லாக்டவுனால் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், சின்னத்திரை நடிகர் ஒருவர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
பிரபல இந்தி டிவி நடிகர் கரண் காண்டேல்வால். சித்திக் விநாயக், ஹைவான். சாத் நிபனா சாதியா உட்பட சில டிவி தொடர்களில் நடித்துள்ளார்.
மும்பையில் வசித்து வந்த இவரின் சொந்த ஊர் கேரளாவில் உள்ளது. கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதர பிரச்னை காரணமாக, தாக்குப்பிடிக்க முடியாமல் ஊருக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றால்
உலகம் முழுவதும் மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை கடந்துள்ளது. லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த தொற்றால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி
இதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவில் மும்பையில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு வசித்துவருபவர்கள் கடும் சிக்கலில் உள்ளனர்.

கரண் காண்டேல்வால்
இந்நிலையில், டிவி நடிகர் கரண் காண்டேல்வால் பண கஷ்டம் காரணமாக, கேரளா திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, மும்பையில் பல வருடங்களாக இருக்கிறேன். இப்போதைய சூழல், என்னை சொந்த ஊருக்கு கட்டாயமாக அனுப்பி வைத்திருக்கிறது. கொரோனாவால் மும்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனது உணவுக்கும் தேவைக்குமே கஷ்டப்படவேண்டிய சூழல் வந்துவிட்டது.

முதுகு வலியோடு
செலவுகளை சமாளிக்க முடியவில்லை. அடுத்து நடிக்க வேண்டிய தொடர்களில் இருந்து சம்பளம் கிடைக்கவில்லை. லாக்டவுனுக்கு முன்பாக விபத்தில் சிக்கினேன். இதனால் என் முதுகில் காயம் ஏற்பட்டது. எனது வீட்டில் இருந்து பணம் அனுப்பினார்கள். அதை வைத்துக்கொண்டு, முதுகு வலியோடு எனது காரை 1400 கி.மீ ஓட்டி கேரளா வந்தேன். வழிகளில் எனக்கு ஆலோசனை வழங்கிய போலீசாருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











