பெண் இயக்குநர் நூர்ஜஹான் பேய்ப் படம் கரிக்காட்டுக் குப்பம்!
தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு புதிய இயக்குநர் களமிறங்குகிறார். அவர் பெயர் ஜெஎம் நூர்ஜஹான். கரிக்காட்டுக் குப்பம் என்ற படத்தை முதல் முறையாக இயக்குகிறார் நூர்ஜஹான்.
அபிசரவணன் - ஸ்வேதா நடிக்கும் இந்தப் படத்தை ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெஎம் நூர்ஜஹானே தயாரிக்கிறார்.

ஆபத்தான ஈசிஆர்
கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த கரிக்காட்டுக் குப்பம் உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவதுதான் இந்த கரிக்காட்டுக் குப்பம். இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ஈசிஆர் பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கரிக்காட்டுக் குப்பம் உருவாகிறது.

ஸ்வேதா
அபி சரவணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் விவேக் நடித்த நான்தான் பாலா படத்தின் நாயகியாக நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.

காதல்
படத்தின் தொடக்க விழா அண்மையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது படம் பற்றி இயக்குநர் நூர்ஜஹான் கூறுகையில், "இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு மும்பே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப்பட்டு கடன் வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதலிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள்.

பேய்ப் படம்
அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன ? என்பதை திகில் கலந்த படமாக 'கரிக்காட்டுக் குப்பம்' உருவாகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











