கர்நாடகாவில் சினிமா டிக்கெட் கொள்ளைக்கு ஆப்பு வைத்த பட்ஜெட்
பெங்களூர்: கர்நாடகா முழுவதும் மல்டிபிளக்ஸுகள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்சமாக ரூ.200க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சகத்தை தன் வசம் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.
கர்நாடகாவில் அதுவும் மால்களில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் சினிமா டிக்கெட் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையா பட்ஜெட்டில் சினிமா டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூ.200
கர்நாடகாவில் உள்ள மல்டிபிளக்ஸுகள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் ரூ.200க்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என்று சித்தராமையா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

திரைப்பட நகரம்
கன்னட திரையுலகை மேம்படுத்தும் வகையில் மைசூருவில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கன்னட திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னட படம்
மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் ஒரு திரையிலாவது மதியம் 1.30 மணி முதல் 7.30 மணிக்குள் கன்னடம் மற்றும் பிராந்திய மொழி படங்களை கட்டாயம் திரையிட வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்
மல்டிபிளக்ஸுகளில் பீக் அவர்களில் ஒரு ரேட் மற்ற நேரங்களில் ஒரு ரேட், வார இறுதி நாட்களில் ஒரு ரேட் என்று சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்தராமையாவின் அறிவிப்பால் தியேட்டர் செல்லும் கூட்டம் நிம்மதி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











