Karthi - அகில உலக சூப்பர் ஸ்டாரான கார்த்தி?.. எல்லாத்துக்கும் காரணம் பொன்னியின் செல்வன் 2
சென்னை: Karthi (கார்த்தி) பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்தனர் கார்த்தியின் ரசிகர்கள். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பாஸிட்டிவ் விமர்சனத்தை பெற்ற அந்தப் படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பொன்னியின் செல்வன் 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் நிவர்த்தி செய்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர்.
ரசிகர்களின் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாகவும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நிச்சயம் பெரும் ஹிட்டடிக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். அதேசமயம் இரண்டாம் பாகத்துக்கு முதல் பாகமே பரவாயில்லை. ஒரு சரித்திர படத்தை எப்படி எடுக்க வேண்டும் என ராஜமௌலியிடம் மணிரத்னம் கற்றுக்கொள்ள வேண்டும் என சிலர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தனர்.

வரலாற்றை மாற்றினாரா மணி: அதேபோல் பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார் என்றே கல்கி எழுதியிருப்பார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது போன்ற காட்சியை மணிரத்னம் வைத்திருக்கிறார். இதன் மூலம் சோழர்களின் வரலாறை மாற்றி அமைத்திருக்கிறாரா மணிரத்னம் என்ற கேள்வியும் ஒரு தரப்பினரிடம் எழுந்திருக்கிறது.

ஜப்பானிலிருந்து வந்த ரசிகர்கள்: இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து டெருமி கக்குபரி (Terumi Kakubari) மற்றும் எண்டோ (ISAO Endo)ஆகிய ரசிகர்கள் சென்னை வந்தனர். படத்தை நான்கு முறை பார்த்த அவர்கள் கார்த்தியை அவரது இல்லத்துக்கு சென்று நேரிலும் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர். இதனை பார்த்த பிற ரசிகர்கள், கார்த்தி அகில உலக சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் என கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

எப்படி ரசிகர்கள் ஆனார்கள்?: இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு பணி நிமித்தமாக சென்னை வந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் லாக் டவுன் போடப்பட்டதால் அவர்கள் இங்கேயே தங்கும் சூழல் உருவாகியது. அந்த சமயத்தில் பல தமிழ் திரைப்படங்களை பார்த்த அவர்கள் கார்த்தி நடித்த கைதி படத்தை பார்த்து அவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். தொடர்ந்து ஜப்பான் சென்ற அவர்கள், அங்கும் தமிழ் படங்களை பார்க்கும் பழக்கத்தை கைவிடவில்லை. தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸாவதை அறிந்த அவர்கள் மீண்டும் சென்னை வந்து படத்தை பார்த்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











