தடுப்பூசி பற்றி வித்தியாச விழிப்புணர்வு...கார்த்தியின் புதிய முயற்சி
சென்னை : கடந்த சில வாரங்களாக கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் புதிய உச்சம்தொட்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி விட்டன, ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற செய்தி தான் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் தமிழக முதல்வரிடம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைவர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களிடம் நடிகர் கார்த்தி, கொரோனா குறித்த தனது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில், இது ஆன்லைன் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களையும் கார்த்தி கேட்டுள்ளார். முதல் அலையில் இரண்டாம் அலை எவ்வாறு வேறுபடுகிறது, என்னென்ன அறிகுறிகள், சிடி ஸ்கேன் ஏன் அவசியம் என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.
தடுப்பூசி பற்றி அனைவரின் மனதிலும் எழும் கேள்விகளையும் கார்த்தி கேட்டுள்ளார். கார்த்தியின் கேள்விகளுக்கு டாக்டர் அளித்த பதில் ஆகியன வீடியோவாக பதிவிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











