சர்தார் படத்தில் ‘ரா’ அதிகாரியாக நடித்துள்ளேன்… 2 வருட கடின ஆராய்ச்சி… கார்த்தியே சொன்ன சீக்ரெட்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சர்தார் படத்தில் தனது கேரக்டர் குறித்து நடிகர் கார்த்தி முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வந்தியத்தேவனுக்கு வரவேற்பு
கார்த்தியின் 'விருமன்', 'பொன்னியின் செல்வன்' என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்துள்ளன. மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்திருந்தார். கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வனை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரைப்படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளி வெளியீடாக வரும் இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சர்தார் படத்தின் டீசர் கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஏறுமயிலேறி' வெளியாகி ஹிட் அடித்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்தப் பாடலை கார்த்தியே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்தார் படத்தில் தனது கேரக்டர் குறித்து நடிகர் கார்த்தி மனம் திறந்துள்ளார்.

ரகசிய உளவாளி
சர்தார் டீசரை பார்க்கும் போதே இது ஸ்பை திரில்லர் படமாக இருக்கும் எனவும், கார்த்தி இதில் ரகசிய ஏஜெண்டாக நடித்துள்ளதும் உறுதியானது. இதுகுறித்து பேசிய கார்த்தி, "தமிழ் சினிமாவில் உளவாளிகள் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளன. ஆனால் அதற்கும் இந்தப் படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல், சர்தார் படத்தில் ரகசிய உளவாளியாக நிறைய கெட்டப்புகளில் நடித்துள்ளேன். அந்த உளவாளி என்ன தேடுகிறான், எதற்கு தேடுகிறான், என்ன செய்யப் போகிறான் என்பது சஸ்பென்ஸாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

2 வருட ஆராய்ச்சி
மேலும், ரகசிய உளவாளி கேரக்டரை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நிறைய ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ளோம். இதில் ஹாலிவுட் படங்களைப் போல க்ளாமர் காட்சிகள் இல்லாமல், அனைவரும் பார்க்கும்படி இருக்கும். அதேபோல், "சர்தார் படத்தில் வயதான அப்பா கேரக்டரில் நடித்துள்ளேன், அந்த கெட்டப்பை உருவாக்கவும் ரொம்பவே சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் கதை பல நாடுகளுக்கும் டிராவல் ஆகும். ராஷி கண்ணா வக்கீலாகவும், ரஜிஷா விஜயன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். 1980ல் இருந்து கதை தொடங்கும்" எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெற்றிபெறவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சக்ஸஸ் ஆகுமா சர்தார்?
பொதுவாக ரா அதிகாரியாக வேலை பார்ப்பவர்கள், தாங்கள் யார் என்று அவர்கள் குடும்பத்திற்கு கூட சொல்ல மாட்டார்கள், மக்களோடு மக்களாக கண்டுபிடிக்க முடியாதபடி ரொம்ப இயல்பாக இருப்பார்கள், தங்களைப்பற்றி எந்த உண்மையையும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இந்தப்படத்திற்காக 2 வருடம் ஆராய்ச்சி செய்துள்ளதாக கார்த்தி கூறியுள்ளது எதிர்பார்ப்பை தான் அதிகரிக்க வைத்துள்ளது. அதேநேரம், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படத்தில் அவர் ரா அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால், செல்லும் இடமெல்லாம் நான் ஒரு ரா ஆஃபிஸர் என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால், சர்தார் படத்தில் கார்த்தியின் கேரக்டர் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











