கிறிஸ்துமஸுக்கே பிரியாணி போட்டுடலாமா?- தீவிர யோசனையில் கார்த்தி
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தை வரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் கார்த்தியும் ஸ்டுடியோ கிரீனும்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி - ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிரியாணி.

பிரச்சினையில் பிரியாணி
இந்தப் படம்தான் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் கார்த்தி மற்றும் ஸ்டுடியோ கிரீனுக்கும் ஈகோ மோதல் என்றும் அதனால் படத்தை தள்ளி வைத்துவிட்டு, அழகுராஜாவை ரிலீஸ் பண்ணியதாகவும் பேச்சு நிலவியது.

அழகுராஜா
ஆனால் தீபாவளிக்கு வெளியான அழகுராஜாவுக்கு கடைசி இடம்தான் கிடைத்தது. பல தியேட்டர்கள் இந்தப் படத்துக்கு பதில் வேறு படங்களை திரையிட முயற்சித்ததால், தியேட்டர்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பீட்சா 2 படத்தை இன்று வெளியிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன்.

கிறிஸ்துமஸ்
பீட்சா 2-ம் ஒரு மீடியம் பட்ஜெட் படம்தான். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தாக்குப் பிடிக்கும். அதன்பிறகு இதே அரங்குகள் வேறு படங்களுக்கு தாவும் வாய்ப்புள்ளதால், தயாராக உள்ள பிரியாணியை கிறிஸ்துமஸுக்கு திரையிட்டுவிட யோசித்து வருகிறார்கள்.

நிச்சயம் வெற்றி பெறும்
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கார்த்தியின் பாத்திரம் குறித்து கொஞ்சம் கடுப்பிலிருந்த ஸ்டுடியோ கிரீன், இப்போது கிறிஸ்துமஸ் வீக் எண்டுக்கு ஏற்ற படம் என பிரியாணியைக் கருதுகிறது. எனவே வெளியீட்டு வேலைகளில் மும்முரம் காட்டுகிறது.

டிசம்பர் 20-ம் தேதியே..
இந்தப் படம் ஜெயித்தால், கார்த்திக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். அநேகமாக டிசம்பர் 20-ம் தேதியே பிரியாணியை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!


Click it and Unblock the Notifications











