சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!
சென்னை: தன் மகன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சொந்த தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். மிகப் பிரபலமான நடிகர். பல வெற்றிப் படங்கள் தந்தவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார். இப்போது அவர்கள் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் எஸ்டேட், 1-வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் கடந்த திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்தனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அவரது மனுவை விசாரிப்பதாகச் சொன்னார்கள்.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக் கொடுத்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா, ஒரு புகாரை தேனழாம்பேட்டை போலீசில் நேற்று இரவு கொடுத்தார்.
அதில், "எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.
என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











