பீப் பாடல் போன்ற தவறான எண்ணங்கள் பிரபலமானவர் மனதில் தோன்றக் கூடாது- கார்த்திக்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் பிரபலமான ஒருவர் மனதில் தோன்றக் கூடாது என்று நடிகர் கார்த்திக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிம்புவின் பீப் பாடல் விவகாரம் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பாடல் குறித்து திரைத்துறையினர் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் பீப் பாடல் விவகாரத்தில் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார். "நான் திரைத்துறையை நேசிப்பவன்.
35 ஆண்டுகளாக அதில் இருந்து வருகிறேன். கோவில் போல அதை நேசிப்பவன். ஆனால் தமிழ் தற்போது தேய்ந்து வருகிறது. தரம் என்பதில் இருந்து ஒருபோதும் தாண்டக்கூடாது.
நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரத்தை திரைத்துறையினர் தவறாக பயன்படுத்தக்கூடாது. சிம்பு பாடிய ‘பீப்' பாடலை நானும் கேட்டேன்.
பாடலில் பல்லவிக்கு பிறகு ஒரு வரியைக்கூட கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன். அவருடைய தந்தை டி.ராஜேந்தரும் எனக்கு நல்ல நண்பர்.
பாடலை தான் வெளியிடவில்லை என்று சிம்பு கூறினாலும், திரைத்துறையில் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் தோன்றவே கூடாது".
இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











