இளையராஜாவின் 1,540வது படம்.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த விஷயத்தை கவனிங்க!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனது 10ஆவது படத்தை இயக்கி வருகிறார். படத்தின் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜாவுக்கு இது 1540வது படம். மேலும் அவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 51 ஆண்டுகள் ஆகிறது. இவை குறித்து எல்லாம் குறிப்பிட்டு மிகவும் எமோஷனலாக எழுதிய குறிப்பு ஒன்றை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட்ள்ளார். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " என்னுடைய பத்தாவது திரைப்படம், என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு கதை. மகான் திரைப்படத்திற்குப் பிறகு நான் உடனடியாக இயக்க நினைத்த படம் இதுதான். ஒரு கதை தனக்கான கதையைச் சொல்பவரையும், அது சொல்லப்பட வேண்டிய நேரத்தையும் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்று நான் நம்புகிறேன். இந்தக் கதை தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டது, இப்போது அதைச் சுற்றியுள்ள மிகச் சிறந்த மனிதர்களுடன் இது படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனது பார்வையைப் புரிந்து கொண்ட சரியான தயாரிப்பாளர்களான குனீத் மோங்கா & அசின் ஜெயின் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் கதைக் கேட்டதில் இருந்தே எனது எண்ணத்தோடு ஒத்துப்போனார்கள். என்னுடைய கனவு இப்போது அவர்களின் கனவாகவும் மாறியுள்ளது. அதை உலகிற்கு எங்களின் படைப்பைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜோதி தேஷ்பாண்டே, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்த மிக அற்புதமான ஆசிர்வாதம் என்றால் அது, இசைஞானி இளையராஜா சார் இதற்கு இசையமைப்பதுதான். இது அவரின் 1540-வது திரைப்படம். நான் ராஜா சாரின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்வும் ஏதோ ஒரு வகையில் அவரது பாடல்களுடனோ அல்லது பின்னணி இசையுடனோ (BGM) இணைக்கப்பட்டுள்ளது. அது மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், இரக்கம், பச்சாதாபம், உந்துதல்... என அனைத்தும் அவரது இசையோடு பிணைக்கப்பட்டுள்ளன. அவர் எனக்கு ஒரு வாழ்வியல் முறை, நம்மிடையே பெரும்பாலானோருக்கும் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்.

வாழ்நாள் கனவு: அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தபோதிலும், எனது முந்தைய படங்களின் கதையை அவரிடம் செல்வதற்குக் கூட எனக்குத் துணிச்சல் இருந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில், படத்தின் முதல் கட்டத் தொகுப்பு (first cut) முடிந்ததும், இதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்றும், அவர் கண்டிப்பாக 'ஆம்' என்று கூறுவார் என்றும் நான் தீர்க்கமாக நம்பினேன். அவர் சம்மதித்துவிட்டார்.
ஆன்மீகப் பயணம்: அவர் ஒரு சனிக்கிழமை மாலை அந்த முதல் கட்ட தொகுப்பைப் பார்த்தார். அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது, அடுத்த நாள் காலையிலிருந்தே நாம் வேலையைத் தொடங்கலாம் என்று கூறினார். அன்றிலிருந்து, அடுத்த 25 நாட்கள் அந்த 'ராக தேவனுடன்' ஒரு மிக உன்னதமான ஆன்மீகப் பயணமாக மாறியது.
விரைவில்: அந்த மாபெரும் கலைஞர் இசையை உருவாக்குவதைப் பார்ப்பது ஒரு அதிசயமான அனுபவம்... உண்மையான ஆசிர்வாதம். இந்தப் படத்தின் பாடல்களைத் தவிர, இதன் பின்னணி இசையையும் (background scores) படத்தின் ரிலீசுக்கு முன்பே ஒரு தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று ராஜா சார் கூறினார். ஆம், நாங்கள் அதை விரைவில் வெளியிடுகிறோம், நீங்கள் அனைவரும் அதைக் கேட்டு, உணர்ந்து, அதில் கரையப் போவதைக்காண என்னால் காத்திருக்க முடியாது. கார்த்திக் சுப்புராஜ் 10. இசைஞானி இளையராஜா 1540. ஒரு Dream 10 Blessing1540 விரைவில் வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications