விஜய், அஜித்தை இயக்கினால் தான் வளர்ச்சின்னு நினைக்கக் கூடாது.. கார்த்திக் சுப்புராஜ் பளிச்!
சென்னை: ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யாவின் 44 வது படத்தை இயக்க உள்ளார். அதற்காக அந்தமான் சென்றுள்ள கார்த்திக் சுப்புராஜ் ஜூன் 3ம் தேதியான திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கினால் தான் இயக்குநர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது என்கிற எண்ணம் எழக் கூடாது எனப் பேசியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. ஏகப்பட்ட விருதுகளையும் அந்த படம் குவித்தது.
கார்த்திக் சுப்புராஜ் படம்: கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகள் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ் அந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். விஜய் சேதுபதி வைத்து அவர் இயக்கிய முதல் படமான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வண்ணமாகவும் உள்ளன.
ஓகே சொல்லாத விஜய்?: தளபதி விஜய்யின் லியோ படத்தின் பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்று இருந்தார். தளபதி 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு எச். வினோத்துக்கு சென்று விட்டது. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.
விஜய் , அஜித்தை இயக்கினால் தான்?: சமீபத்தில் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ் விஜய் மற்றும் அஜித் படங்களை இயக்கினால் தான் முன்னணி இயக்குநர் என்றோ, அதுதான் இயக்குநர்களின் அல்டிமேட் வளர்ச்சி என்கிற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது என்றும் நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்களே சிறந்த இயக்குநர்களாக திகழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
சூர்யா படம்: கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யா 44 படத்தை முதல்கட்டமாக அந்தமானில் படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி உள்ளார். விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து படம் பண்ண இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்தை தொடர்ந்து தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்க காத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா உடன் புறநானூறு படங்களை அறிவித்துள்ள சூர்யா அந்த இரண்டு படங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அதிரடியாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா சிறந்த பர்ஃபார்மர் என்றும் நந்தா காலத்தில் இருந்தே அவரது நடிப்பு பிடிக்கும் என்றும் எந்த ரோல் கொடுத்தாலும் மாஸாவும் கிளாஸாகவும் நடிக்கக் கூடிய நடிகர் சூர்யா என்றும் பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.


Click it and Unblock the Notifications











