‘’இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்".. ஆஸ்கர் மேடையில் ஒலித்த சிங்க பெண்களின் குரல்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம், சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை வென்றுள்ளது. இந்த விருதை பெற்றுக்கொண்ட கார்த்திகி மற்றும் குனீத் மோங்கா மேடையில் உணர்ச்சி பொங்க பேசினர்.
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. மேலும், யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படமும் ஆஸ்கர் விருதை வென்றது.

குவியும் வாழ்த்து
இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தை இயக்கி தயாரித்த இரண்டு பெண்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

‘’இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்"
ஆஸ்கர் மேடையில் பேசிய 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்,பழங்குடி சமுதாயத்தின் மரியாதை, மற்ற உயிரினங்கள் மேல் அவர்கள் காட்டும் பரிவு, அனைத்து உயிர்களுடன் அன்புடன் வாழ்வது போன்றவற்றுக்கு கிடைத்தது தான் இந்த விருது. எங்கள் படத்தை அங்கீகரித்ததற்கும், பழங்குடி இன மக்களை முன்னிலைப் படுத்தியதற்கும் ஆஸ்கர் அகாடமிக்கு என் நன்றி. என் படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இரண்டு பெண்கள் சாதித்து இருக்கிறோம்
ஆஸ்கர் விருதுபெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா, இந்திய தயாரிப்பு ஒன்றுக்கு முதல் ஆஸ்கரை வென்றிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, இதை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும், மிகவும் துணிச்சலான எதிர்காலம் இருக்கிறது. வாருங்கள் முன்னேறலாம் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் நினைத்தால் எதையும் எளிதில் சாதித்துவிட முடியும் என இந்த இரண்டு பெண்களும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











