சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு திடீர் அழைப்பு!... பாலுமகேந்திராவுக்கு அழைப்பில்லை
சென்னை: சென்னையில் இன்று தொடங்க இருக்கும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு திடீரென அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் தேவராஜ், எடிட்டர் மோகன் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதிக்கு அழைப்பிதழை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட கருணாநிதி "வாழ்த்துக்கள்!" என்று மட்டும் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தனக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து," நான் யார்...எனக்கு அழைப்பு விடுக்க...?" என்று வேதனையுடன் அறிக்கை ஒன்றில் கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திராவுக்கு அழைப்பில்லை
இதனிடையே இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு தனக்கு அழைப்பில்லை என இயக்குநர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாதெமி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், "நான் மிகச்சிறிய ஆள் என்பதால் என்னை விழாவுக்கு அழைக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்த விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை" என்றார்.
பத்திரிக்கை வர லேட்
இது குறித்து கருத்து கூறியுள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எல்.சுரேஷ், சினிமா விழாவிற்கான பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வர தாமதமாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவிற்கே இன்றுதான் பத்திரிக்கை கொடுத்தோம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











