திரைத்துறையில் கருணாநிதியின் ஆளுமை.. காலத்தால் அழியாத காவியங்களே சான்று!
சென்னை: தமிழ்த் திரைத்துறையில் கருணாநிதியின் பங்களிப்பை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.
தமிழக முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி அவரது வரலாற்று சாதனைகள் நினைவு கூறப்பட்டு வருகிறது.
மறைந்த மு.கருணாநிதி சினிமா, இலக்கியம், அரசியல், பத்திரிக்கைத் துறை என பன் முகங்களை கொண்ட வித்தகர். அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவதற்கு முன்பாகவே திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கிக்கொண்டார்.

ராஜகுமாரி படம்
கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கருணாநிதி தனது 17 வயதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜகுமாரி படத்திற்கு கதை வசனம் எழுதினார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.

பாடல்கள்
கருணாநிதி எழுதிய வசனங்கள் சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுப்பவையாக இருந்தன. ஏராளமான படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ள கருணாநிதி பாடல்களையும் எழுதியுள்ளார்.

இலக்கியவாதி
இதன் மூலம் சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார் கருணாநிதி. குறிப்பாக 1952ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனங்கள் இன்றும் பெருமைமிகு வசனங்களாக பார்க்கப்படுகிறது.

வழக்காடுதல் காட்சி
பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கருணாநிதியின் பேனா வாயிலாக பிறந்த வசனங்கள் அனல் பறக்கும். நீதிமன்றத்தில் நடக்கும் அந்த வாதமும் வழக்காடுதலும் இன்றைக்கும் மக்களால் ரசிக்கப்படுகிறது.

தடாகத்தை சுத்தம் செய்யும் மீன்
மேலும், "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது' என அப்போதே சமூகத்தின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தியிருப்பார் கருணாநிதி.

பூம்புகார் படம்
இதேபோல் மனோகரா படமும் மறக்கமுடியாக காவியங்களில் ஒன்றாக இருக்க காரணம் கருணாநிதியின் வசனங்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமா பூம்புகார் படத்தின் மூலம் சிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் கண் முன்னே கொண்டு வந்திருப்பார் கருணாநிதி.

நல்லான் வகுத்ததா நீதி?
தனது கணவனை கொல்ல உத்தரவிட்ட அரசனை எதிர்த்து கண்ணகி கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் கண்களை இமைக்காமல் ரசிக்க செய்யும் காட்சிகள். யார் கள்வன்? என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர். நல்லான் வகுத்ததா நீதி? இல்லை இல்லை இந்த வல்லான் வகுத்ததே நீதி

மகுடத்தில் உள்ள முத்து
இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை. இது கோவலன்தேவியின் சிலம்பு. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? என்ற பூம்புகார் வசனம் தமிழ் சினிமா என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட முத்துகளில் ஒன்று.

உடன்பிறப்பே
15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பெருமை
தனது நினைவிருக்கும் வரை தனது பேனாவுக்கு ஓய்வே கொடுக்கவில்லை கருணாநிதி. தமிழ் சினிமாவை பொறுத்தவரை 15 பாடல்களை எழுதியுள்ள கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் என 75 படங்களில் கருணாநிதி அளித்த பங்கு தமிழ் சினிமாவின் பெருமை.

காவேரி மருத்துவமனை
1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த கருணாநிதி, ஆகஸ்ட் 7ஆம் தேதி 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











