Karuppu Day 8 Box Office - சூர்யாவின் கருப்பு 8வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசுதான்
சென்னை: சூர்யா ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி இப்படமானது ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது திரைப்படம். விமர்சன ரீதியாக பெரும்பாலும் கொண்டாடப்பட்ட படம்; வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் 8வது நாளான நேற்று இப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகராக திரைத்துறையில் கலக்கிவந்த ஆர்.ஜே.பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் கதாசிரியராகவும், மூக்குத்தி அம்மன் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. சூழல் இப்படி இருக்க; அவரது கவனம் ஒரு இயக்குநராக பெரிய ஹீரோக்கள் பக்கம் சென்றது. அதன்படி கருப்பு படத்தை சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். திரிஷா ஹீரோயினாக கமிட்டானார். சாய் அபயங்கர் இசையமைப்பில்; ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

படம் சூப்பர் ஹிட்: மே 15ஆம் தேதி இப்படம் ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. தியேட்டரில் படம் பார்த்த பலரும்; சாமி வந்து அருள் ஏறி ஆடியது போன்றெல்லாம் செய்தார்கள். இதெல்லாம் ஒரு விளம்பரம்தான் என பேச்சுக்கள் வந்த சூழலில்; இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என படக்குழு விளக்கமளித்தது. ஆகமொத்தம் ரசிகர்கள் அந்தப் படத்தோடு ஒன்றி போய்விட்டார்கள் என்பதையே அந்த ஆட்டமெல்லாம் உணர்த்தின.
இளையராஜாவுடன் பிரச்னை: அதேபோல் இளையராஜாவை படத்தில் அவமதித்துவிட்டதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதை பார்த்து பதறிய படக்குழு அப்படியும் நாங்கள் செய்யவில்லை என்று விளக்கமளித்து நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொண்டது. ரிலீஸுக்கு முன்பும், பின்பும் கருப்பு இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கும் என்று சூர்யா கனவிலும் நினைத்திருக்கமாட்டார். எப்படியோ இவ்வளவு பிரச்னைகளை கடந்தும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
படக்குழுவின் செயல்: ரசிகர்களில் பலர் இந்தப் படத்தை இரண்டாவது, மூன்றாவது தடவையெல்லாம் பார்க்கிறார்கள். பலர் குடும்பத்தோடு வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் தியேட்டராக செல்கிறார்கள். நேற்றுகூட கோவையில் ஒரு திரையரங்கத்துக்கு சென்று நன்றி கூறினார்கள். இந்நிலையில் படம் ரிலீஸாகி எட்டாவது நாளான நேற்று எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்ற விவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
எவ்வளவு வசூல்?: அதன்படி நேற்று மட்டும் இந்தியாவில் அந்தப் படம் மொத்தம் 7.80 கோடி ரூபாயை வசூலித்து; மொத்தம் 150 கோடி ரூபாய் வரை இங்கே வசூலித்திருக்கிறதாம். 7வது நாளை ஒப்பிடுகையில் எட்டாவது நாள் வசூல் குறைவுதான் என்றாலும் கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பது நல்ல விஷயமே. இதுவரை உலகம் முழுவதும் அந்தப் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப் படம் 200 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சில நாட்களுக்கு முன்பே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications
