Karuppu Day 1 Box Office - கருப்பு முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. கடந்த 14ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் சில பிரச்னைகள் காரணமாக ஒரு நாள் தாமதமாகி நேற்று வெளியானது. சூர்யாவுக்கு ஹிட் கிடைத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால்; இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக பாலாஜி படத்தை கொடுத்திருந்தார். இதனால் இப்படம் சூர்யாவுக்கு தரமான கம்பேக்காக அமைந்திருக்கிறது.
ரேடியோ ஜாக்கி, நடிகராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து இப்போது சூர்யாவை வைத்து கருப்பு படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக திரிஷா நடிக்க; சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. இதற்கு முன்பு சில வருடங்களாகவே சூர்யா நடிக்கும் எந்தப் படமும் பெரிய ரெஸ்பான்ஸை பெறவில்லை.

பெரிய எதிர்பார்ப்பு: அதன் காரணமாக கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு கம்பேக்காக அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். முதலில் 14ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டன. ஆனால் சில காரணங்களால் அன்று ரிலீஸாகவில்லை. அதை நினைத்து பாலாஜி எமோஷனலாக காரில் இருந்தபடியே வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் முடிக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் படம் ரிலீஸானது.
எப்படி இருக்கிறது படம்?: நேற்று ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருந்தது. பாலாஜியின் கதை, திரைக்கதை,மேக்கிங் எல்லாம் பட்டாசாக இருக்க; வழக்கம்போல் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மாஸ், க்ளாஸ் என இரண்டு வேரியேஷன்களில் அவரது நடிப்பு இருந்தது. ஸ்க்ரீனில் இப்படி ஒரு சூர்யாவை பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன; எப்படியோ பல காலம் கழித்து அவர் தரமான கம்பேக் கொடுத்துவிட்டார் என்று சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
எமோஷனலான ஆர்.ஜே.பாலாஜி: நேற்று திரிஷா, கார்த்தி உள்ளிட்டோருடன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரோகிணி திரையரங்கில் பார்த்தார் பாலாஜி. அவர் தியேட்டரில் காரிலிருந்து இறங்கும்போதே ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். படம் முடிந்த பிறகு அனைவருமே பாலாஜியை நோக்கி பாராட்டை தெரிவித்தார்கள். ரெஸ்பான்ஸும் ஏகபோகமாக இருந்தது. இதன் காரணமாக ஜெர்சி பட நானி போல் உணர்ச்சி மிகுதியில் தியேட்டர் பால்கனியில் இருந்து கத்தி தனது சந்தோஷத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார் ஆர்.ஜே.பாலாஜி. அருகில் இருந்த கார்த்தி, திரிஷா, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் எல்லாம் அவரை தேற்றினார்கள்.
பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை: படத்துக்கு இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. நீண்ட வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு ஒரு ஹிட் கிடைத்திருப்பதால் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நேற்று அப்படம் இந்தியாவில் மொத்தம் 16.66 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். வெளிநாடுகளில் 4 கோடி ரூபாயும் என மொத்தம் 20.66 கோடி ரூபாயை படம் முதல் நாளிலேயே அள்ளியிருக்கிறதாம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதாலும்; இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதாலும் இன்னும் கூட்டம் கூடி; வசூலை அதிகரிக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications
