'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்!'

இவர் எப்போ எம்எல்ஏ அல்லது கவுன்சிலரானார் என்று யோசிக்க வேண்டாம். கருப்பு இப்போது சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். 'அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி நாயகியாக நடிக்கிறார். 'மலையன்' என்ற படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று இலவசமாகவே போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் கருப்பு.
இதைக் கேள்விப்பட்ட மக்கள், தங்கள் ஊர்களிலும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கஞ்சா கருப்புவுக்கு அனுப்பியுள்ளார்களாம்.
இவரும் சளைக்காமல் எல்லா மனுக்களுக்கும் பதில் அனுப்பியதோடு, மனு கொடுத்த ஊருக்கும் போய் பார்த்து தேவையென்றால் போட்டுத் தருவதாக வாக்களித்துள்ளாராம்.
படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தந்திடறோம்ணே.. கவலய விடுங்க என ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பும் கருப்புதான் இப்போ காரைக்குடி பக்கத்துல நிஜ ஹீரோ!


Click it and Unblock the Notifications











