காதலர் தினம்.... கணவனின் கனவுக்கு துணை நின்ற மனைவி - கவனம் ஈர்த்த கருப்பு வெள்ளை இயக்குநரின் பேட்டி
சென்னை: சின்னையா என்பவரின் இயக்கத்தில் கருப்பு வெள்ளை குறும்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல கஷ்டங்களை சந்தித்திருக்கும் சின்னையாவுக்கு அவரது காதல் மனைவி பக்கபலமாக நின்றிருக்கிறார்.
திரைத்துறையில் இயக்குநராக நுழைவதற்கு குறும்படம் சிறந்த வழியாக இருக்கிறது. தற்போது முன்னணியில் இருக்கும் பல இயக்குநர்கள் குறும்படங்கள் மூலம் தங்களை நிரூபித்தவர்கள். அப்படி சின்னையா என்பவர் கருப்பு வெள்ளை என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். ஊருக்கெல்லாம் கலப்பு திருமணம் செய்துவைக்கும் முன்னாள் அமைச்சர் தனது மகளுக்கு அதனை செய்துவைத்தாரா என்பதுதான் ஒன்லைன். புள்ளைக்கு பால் ஊட்டி வளர்க்குறாங்களோ இல்லையோ சாதியை ஊட்டி வளர்த்துடுறாங்க அது இப்போ ஆலமரமா நிக்குது போன்ற கூர்மையான வசனங்கள், நேர்த்தியான இயக்கம் என கருப்பு வெள்ளை படம் கவனம் ஈர்க்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கெஜராஜ் முன்னாள் அமைச்சர் வேடத்தில் அதகளம் செய்திருக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் மூலம் இயக்குநர் சின்னையா சினிமாவில் தனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்.

சின்னையாவின் கனவுக்கு துணை நின்ற மனைவி
சின்னையா அடிப்படையில் ஒரு இயந்திர பொறியாளர் ஆவார். சிறு வயதிலேயே தந்தையை பிரிந்த இவருக்கு அடுத்த அடியாக விழுந்தது தாயின் மரணம். அதனையடுத்து அக்காவின் வீட்டில் வளர்ந்த இவர் மணிமேகலை என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் வழக்கம்போல் காதலுக்கு எதிர்ப்பு வர மணிமேகலையை திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூர் அழைத்து சென்றுவிட்டார். மென்பொருளில் எம்.எஸ்.சி முடித்த மணிமேகலையும், பொறியியல் முடித்த சின்னையாவும் சிங்கப்பூரில் பணிபுரிந்தனர்.
கொரோனா வந்து பலரது வாழ்க்கைக்கும், கனவுக்கும் மூடுவிழா நடத்தியதுபோல் சின்னையாவின் வாழ்க்கைக்கும் நடத்தியது. ஆனால் அந்த மூடுவிழா சினிமா எனவும் கனவை திறந்து வைத்திருக்கிறது எனலாம். ஊருக்கு திரும்பிய சின்னையா தனது மனைவியிடம் சினிமாவின் கனவு பற்றி கூற சிங்கப்பூரில் பணியாற்றி சேமித்து வைத்த 10 லட்சம் ரூபாயையும் குறும்படத்துக்காக போட்டிருக்கிறார்.
பொதுவாக சினிமா என்றாலே பயம் கொள்ளும் பெண்கள் மத்தியில் தனது கணவனின் மீதும், தனது காதல் மீதும் நம்பிக்கை வைத்த மணிமேகலை எந்த தடையும் போடாமல் கணவன் குறும்படம் எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார் எனில் அவர்களுடைய காதலின் அடர்த்தியை நாம் புரிந்துகொள்ளலாம். காதலர் தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில் கருப்பு வெள்ளை இயக்குநர் சின்னையாவை தொடர்புகொண்டு பேசினோம்.

மனைவி மணிமேகலை இல்லை என்றால் நான் இல்லை - சின்னையா
அப்போது பேசிய அவர், "எனது அக்காவின் திருமணத்தில் எனது மனைவியை முதல்முறையாக பார்த்தேன். அதன் பிறகு அவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் எங்கள் காதலுக்கு இரு வீடுகளிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. பிறகு இருவரும் சிங்கப்பூர் சென்று பணியாற்றினோம். கொரோனா வந்த பிறகு ஊருக்கு வந்த நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது என்னுடைய சினிமா கனவு குறித்து மணிமேகலையிடம் சொன்னேன்.
அவர் எதுவும் யோசிக்காமல், உனக்கு என்ன தோன்றுகிறதோ செய் என்று அனுமதி அளித்தார். இதனால் சிங்கப்பூரில் நாங்கள் உழைத்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் போட்டு கருப்பு வெள்ளை படத்தை எடுத்தோம். எங்களுக்குள் வழக்கமான சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவர் வெளியில் என்னை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. நானும் அப்படித்தான். எனது மனைவி இல்லையென்றால் இந்தப் படம் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை. படத்தை பார்த்த மனைவி கண் கலங்கிவிட்டார். உன்னை நான் என்னமோ நினைச்சேன் ஆனால் நல்லாதான் பண்ணியிருக்க என்று பாராட்டினார். பட வெளியீட்டு நிகழ்வில் கூட அவர் எமோஷனலாகத்தான் காணப்பட்டார்.

கார்த்திக் சுப்புராஜ் தந்தை உள்ளே வந்த கதை
எனது நண்பர் அரவிந்த் மூலம் கார்த்திக் சுப்புராஜ் சாரின் தந்தை கெஜராஜ் சார் அறிமுகம். அவரிடம் முதலில் கதையின் அவுட்லைனை மட்டும்தான் சொன்னேன். குறும்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற தயக்கமும் எனக்குள் இருந்தது. ஆனால் கதையின் லைனை கேட்டதும் அவருக்கு பிடித்துவிட்டது. இருப்பினும் படத்தில் வரும் வயலன்ஸ் காட்சிகள் குறித்து முதலில் நான் சொல்லவில்லை. முழு கதையையும் படித்துவிட்டு என்னப்பா இப்டி வயலன்ஸ் இருக்கிறது. கனவு என்பதால் மட்டும் நடிக்கிறேன் என அதில் நடிக்க ஒத்துக்கொண்டார். அவருக்கு எனது மிகப்பெரிய நன்றி.
அதேபோல் எனது நண்பர்கள், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ஆர். ராஜசேகரன், படத்தின் ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் படத்தின் க்ளைமேக்ஸை பாராட்டுகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

மணிரத்னம், கமல்தான் எனது இன்ஸ்பிரேஷன்
மணிரத்னத்தின் படங்களை பார்த்தும், கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பார்த்தும்தான் எனக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் வந்தது. கமல் ஹாசன் இயக்கிய ஹேராம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அந்தப் படத்தில் கமர்ஷியலாக ஒரு சில விஷயங்களை வைத்திருந்தால் அந்தப் படம் மிகச்சிறப்பாக ஓடியிருக்கும். ஆனால், ரியாலிட்டி என்னவோ அதைத்தான் கமல் ஹாசன் காட்சிப்படுத்தியிருப்பார்.

சின்னையாவின் அடுத்தக்கட்ட ப்ளான்
குறும்படம் சிறப்பாக வந்திருக்கிறது. இனி யாரிடமாவது உதவி இயக்குநராக சேர வேண்டும். இந்த இயக்குநரிடம்தான் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்பதில்லை. யாரிடமாவது சேர்ந்து சினிமாவை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். எண்ணித்துணிக இயக்குநர் வெற்றிச்செல்வன், க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி உள்ளிட்டோர் அடுத்த பட வேலைகளில் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று முடித்தார்.

கருப்பு வெள்ளை குறித்து எண்ணித்துணிக இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன்
மேலூரில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கருப்பு வெள்ளை குறும்பட வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எண்ணித்துணிக இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் பேசுகையில், "கருப்பு வெள்ளை குறும்பட வெளியீட்டு நிகழ்வு பிரமாண்டமாக நடந்தது. சின்னையாவும், மணிமேகலையும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இந்தப் படத்துக்காக சிங்கப்பூரில் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டிருக்கிறார்கள். அதற்கு அவரது மனைவியும் துணை நின்றிருக்கிறார் இது பெருமையான விஷயம். அனுபவம் வாய்ந்த இயக்குநர் இயக்கியத்போல் கருப்பு வெள்ளை படம் இருந்தது. ஒட்டுமொத்த டீமும் சிறப்பாக செய்திருந்தார்கள்" என்றார்.

க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி
படம் குறித்து இயக்குநர் விருமாண்டி பேசுகையில், "படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் அட்டகாசமாக செய்திருக்கிறார். அதேபோல் கேமராமேனும் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகன் கலெக்டர் ஆன பிறகு இயக்குநர் எடுத்திருக்கும் ஷாட்கள் அற்புதமாக இருக்கிறது. குறும்படம் பார்த்தது போன்றே தெரியவில்லை. திரைப்படம் பார்த்தது போல் இருந்தது" என்றார்.,


Click it and Unblock the Notifications











