இன்று போல அன்றும் கரூரில் பாதுகாப்பு இருந்திருந்தால்.. முதல்வர் விஜய்யுடன் கண்ணீர் மல்க உருகிய மக்கள்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார செய்த போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக பரிதாபமாக 41 பேர் பலியானது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. நடிகர் விஜய்யின் அரசியலே முடிந்து விடும் சூழல் இருந்த நிலையில், அந்த வலியில் இருந்து மீண்டு வந்து மீண்டும் மக்களை சந்தித்த விஜய்க்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளிக்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் தேர்தலிலேயே மாறி ரஜினிகாந்த் சொன்னது போல எம்ஜிஆர், என்டிஆர் போல மாறிவிட்டார்.
கரூர் சம்பவம் நடந்து சுமார் 285 நாட்கள் கழித்து மீண்டும் இன்று விஜய் கரூருக்கு வந்து மக்களை சந்தித்துப் பேசினார். ஆனால், கரூருக்கு விஜய் வரக் கூடாது என தடுக்க திமுகவினர் வழக்கு தொடுத்ததும் அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுத்தும் வந்தனர்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் விஜய் இன்று உரிய பாதுகாப்புடன் கரூர் மக்களை நேரில் சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிய போது மக்கள் கண்ணீர் கடலில் மூழ்க விஜய்யும் கண்கலங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
லஞ்சம் ஒரு பைசா கூட கொடுக்காதீங்க: கரூரில் விஜய் தீய சக்தி என மீண்டும் திமுகவை எதிர்த்து பேசிய நிலையில், கொளத்தூரில் கொத்துப் பரோட்டா போட்ட கதையெல்லாம் செய்து அரசியல் பேச்சுக்களை பேசினாலும், கடைசியாக இந்த ஆட்சியில் லஞ்சமே இல்லை என்றும் அப்படி யாராவது உங்க கிட்ட லஞ்சம் கேட்டால், என் மகன், என் அண்ணன், என் தம்பி, என் புள்ள விஜய்யோட ஆட்சி நடக்குது, ஒரு ரூபாய் லஞ்சம் தரமாட்டோம் என தைரியமாக சொல்லுங்க என தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். இந்தியன் படத்தில் தொடங்கி முதல்வன், இந்தியன் 2 வரை லஞ்ச ஒழிப்பு பற்றி ஷங்கர் எடுத்த படத்தை எல்லாம் இப்போ நிஜத்தில் நடக்கிறது என மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கண்கலங்கிய விஜய்: கரூர் துயரத்தில் உயரிழந்த குடும்பங்களில் அரசு வேலைக்கு தகுதியான 31 பேரை தேர்வு செய்து பணி ஆணையை இன்று கரூரில் முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது சிலர் கண்ணீர் மல்க விஜய்யை கட்டியணைத்த நிலையில், அவரும் துக்கம் தாங்காமல் கண் கலங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
இன்று போல் அன்றும்: மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் புதிதாக அரசியலுக்கு வரும் கட்சியினருக்கு அனுபவம் இல்லாத நிலையில், அரசு சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் கரூர் சம்பவமே நடந்திருக்காது என்றும் இன்று போல அன்றும் பாதுகாப்பு கொடுத்திருந்தால் கண்டிப்பாக 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என கரூர் மக்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications