மக்கள் வாழ மறந்துட்டாங்க..சில லைக்ஸ்-களுக்காக மனிதத்தன்மையை இழந்துடாதீங்க.. சாடும் பிரபல ஹீரோயின்!
மும்பை: கிடைக்கும் சில லைக்ஸ்களுக்காக மனிதத் தன்மையை இழந்துவிடாதீர்கள் என்று பிரபல நடிகை சாடியுள்ளார்.
சோசியல் மீடியாதான் எல்லாம் என்றாகிவிட்டது இப்போது. சாதாரணமானவர்களில் இருந்து பெரிய பிசினஸ்மேன் வரை சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கொரோனா காலத்தில் இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு கிட்டதட்ட அடிமை போலவே ஆகிவிட்டார்கள்.

நடிகை காஷ்மீரா ஷா
எத்தனை லைக்ஸ், எத்தனை கமென்ட் வந்திருப்பதைப் பார்த்து அதற்கு அடிக்ட் ஆனவர்கள் அதிகம். என்ன இவ்வளவு பேர்தான் லைக் பண்ணியிருக்காங்க? என்கிற கவலை கூட பலருக்கு வந்துவிடுகிறது. இந்நிலையில் நடிகை காஷ்மீரா ஷா, கிடைக்கிற லைக்ஸ்களுக்காக மனிதத்தன்மையை இழந்துவிடாதீர்கள் என்று காட்டமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உண்மையான தருணங்கள்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஒருவர் தன் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, அது இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் பதிவுகளாக இருக்கப் போவதில்லை. அது உண்மையான தருணங்களாக இருக்கும். இதுபோன்ற எத்தனை உண்மையான தருணங்களை இழந்திருப்போம்? எப்போதும் போனைப் பார்த்துக்கொண்டு, தங்கள் புகைப்படங்களை யார் லைக் செய்திருக்கிறார்கள், யார் செய்யவில்லை, அவர்களுக்கு எவ்வளவு பாலோயர்கள் இருக்கிறார்கள் என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது.

சொல்ல விரும்புகிறார்கள்
மக்கள் உண்மையில் வாழ மறந்துவிட்டார்கள். நான் சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும் பல பதிவுகளில், தங்கள் சொந்த விஷயங்களை மட்டுமே எழுதிவருகிறார்கள். அதைத் தாண்டி எதையும் செய்வதில்லை. ஆனால், தவறாக இருந்தாலும் எதையோ சொல்ல விரும்புகிறார்கள். உண்மையா இல்லையா என்பதை பற்றி யோசிக்காமலேயே வாட்ஸ் அப் செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீழ்த்த யோசிக்கிறோம்
நாம் முரட்டுத்தனமான அல்லது எதிர்மறை சமூகமாக மாறிவிட்டோம். யாரோ ஒருவர் நல்லது செய்தாலும் அவருக்கு உதவி செய்வதையோ, அல்லது அமைதியாக இருப்பதையோ விட்டுவிட்டு அவரை வீழ்த்துவது பற்றியே யோசிக்கிறோம். சமூக வலைதளங்கள் அல்லது போன்கள் ஏன் வெறுப்பையும் அசிங்கமான விஷயங்களையும் பரப்பப் பயன்படுத்தப்படுகிறது?

எப்போது இழந்தோம்?
ஒரு விபத்து நடந்தால் ஓடி வந்து உதவுவதற்கு பதிலாக மக்கள் அதை வீடியோ எடுக்கிறார்கள். மனித நேயத்தை எங்கே, எப்போது நாம் இழந்தோம்? கடவுளிடம் வேண்ட வேண்டாம். அவர்கள் கோயில்களில் இல்லை. அவர் உதவி செய்யும் மக்கள் மனதில் இருக்கிறார். சில லைக்ஸ்களுக்காக மனித நேயத்தை இழக்காதீர்கள்.

எனக்கும் முக்கியம்
இதற்கு கமென்ட் போட்டாலும் பரவாயில்லை. நீங்கள் எனக்கு முக்கியமானவராக இருந்தால் உங்கள் கருத்தும் எனக்கு முக்கியம். இல்லை என்றால் கவலை இல்லை. அதனால் மனிதத்தன்மையுடன் வாழுங்கள். இவ்வாறு காட்டமாகக் கூறியுள்ளார். இதற்கு சிலர் சிறப்பாக கூறியிருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலர், இந்த சமூகத்தை மாற்றிவிடலாம் என்று கூறியுள்ளனர்.

அகம் புறம்
நடிகை காஷ்மீரா ஷா இந்தியில், பியார் து ஹோனா ஹி தா, இந்துஸ்தான் கி கசம், ஆஷிக் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவர், தமிழில் ஷாம் நடித்த அகம் புறம் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். டிவி தொடர்களிலும் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











