காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. டிவி நடிகை சுட்டுக் கொலை.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் காட்டம்!
காஷ்மீர்: பயங்கரவாதிகள் திடீரென காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் டிவி நடிகையும் பாடகியுமான அம்ரீனா பாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அவருடன் வந்த உறவுக்கார சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காஷ்மீரின் புத்காம் எனும் மாவட்டத்தின் மைய பகுதியான சதூரா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டிவி நடிகை சுட்டுக் கொலை
காஷ்மீரில் பிரபல டிவி நடிகையும் பாடகியுமான அம்ரீனா பாட் தனது வீட்டின் அருகே லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகளால் புதன்கிழமை மாலை நேரத்தில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது உறவுக்கார சிறுவன் உடன் அம்ரீனா இருந்த நிலையில், அவர்கள் நடத்திய தாக்குதலில் சிறுவன் மீதும் குண்டு பாய்ந்தது.

மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அம்ரீனா பாட் மற்றும் அந்த 10 வயது சிறுவனை அருகில் உள்ளவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அம்ரீனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது உறவுக்காரன சிறுவன் உடலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள்
மாலை 7:55 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தடைசெய்யப்பட்ட LeT அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தி உள்ளனர் என்றும் காஷ்மீர் போலீசார் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். அந்த சிறுவனுக்கு கையில் குண்டடிபட்ட நிலையில், அது நீக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

எதற்காக கொன்றார்கள்
சம்பவம் நடைபெற்ற இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனிப்படைகளை அமைத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் காஷ்மீர் போலீசார் இறங்கி உள்ளனர். இந்த கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்றும் அது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் கண்டனம்
காஷ்மீரில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுகின்றனர் என்பதை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், காஷ்மீரில் இந்த பிரச்சனை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











