கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!
சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை காசி தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ஏகப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதிய வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டன.
இந்நிலையில், 50 சதவீத இருக்கை எனும் விதியை மீறி செயல்பட்டதாக சென்னையில் உள்ள காசி தியேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாஸ்டர் ரிலீஸ்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.

வாபஸ் பெற்ற அரசு
நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து பேசிய பின்னர் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு தடை விதித்த பிறகு, தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தததை வாபஸ் வாங்கியது. மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் இருக்கைகளுடனே திரையிடப்படும் என உத்தரவு போடப்பட்டது.

தியேட்டர்களில் விதிமீறல்
ஆனால், மாஸ்டர் படம் வெளியான நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கொரோனா விதிமுறைகளை பல தியேட்டர்கள் கடைபிடிக்காத நிலை ரசிகர்கள் வெளியிட்ட மாஸ்டர் FDFS கொண்டாட்ட வீடியோக்கள் மூலமாகவே தெரிய வந்தன. மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், 50 சதவீத இருக்கைக்கும் அதிகமாக ரசிகர்கள் படம் பார்த்தது உள்ளிட்ட ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்தன.

சிக்கிய காசி தியேட்டர்
சென்னை, கிண்டி அருகே உள்ள காசி தியேட்டர் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வில்லை எனக் கூறி போலீசார் அந்த திரையரங்கின் உரிமையாளர்கள் மீது 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொரோனா விதியை மீறிய குற்றத்திற்காக 5 ஆயிரம் ரூபாயை அபராதத் தொகையாக கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











