விஜயகாந்த்திடமிருந்து கத்துக்கோங்க.. கஸ்தூரி ஓபன் டாக்.. விஜய்க்கு மறைமுக அட்வைஸ் செய்றாங்களோ
சென்னை: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் கடந்த 2023ஆம் வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகாந்த் என்றால் அனைவருக்குமே அவரது கனீர் என்ற குரலும், கலையான உருவமும், அவர் செய்த உதவிகளும்தான் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். அவரால் உதவி பெற்று பலனடைந்தவர்கள் சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் உண்டு. விஜய், சூர்யா போன்ற இப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வளர்ந்தவந்த காலகட்டத்தில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அவர்களுக்கும், அந்தப் படங்களுக்கும் வெளிச்சத்தை பெற்றுத் தந்தவர் விஜயகாந்த். முக்கியமாக அப்படி நடித்ததற்கு சம்பளமும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறை நடிகருக்கும்: விஜய், சூர்யா ஆகியோருக்கு மட்டுமின்றி அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகரான ஷாமுக்கும் உதவி செய்திருக்கிறார். அதாவது தயாரிப்பாளர் ஒருவர் அடியாட்களை வைத்து ஷாமை மிரட்டியபோது நடிகர் சங்கர் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். விஷயம் கேப்டனின் காதுகளுக்கு சென்றதை அடுத்து; சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை ஃபோனில் தொடர்புகொண்டு எச்சரிக்க செய்தார். இந்த விஷயத்தை ஷாமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அரசியலில் விஜயகாந்த்: அதேபோல் தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் வாங்கிக்கொடுத்ததும் விஜயகாந்த்தான். இப்படி ஏகப்பட்ட நல்லதை செய்து தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்தியிருந்த அவர் அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்த்து முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். எனவே அடுத்த தேர்தலில் அவரை கூட்டணிக்குள் இழுக்க கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரும் செய்த முயற்சியில்; அதிமுகதான் வென்றது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மாறினார். தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
உயிரிழப்பு: இதன் காரணமாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்தாலும் அவரது உடல்நிலை முன்னர் போல் இயல்பாக இல்லை. அதனையடுத்து அரசியலிலிருந்து ஒதுங்கிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. சூழல் இப்படி இருக்க அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கஸ்தூரி பேட்டி: அவர் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசுகையில், "நடிகர்கள் அரசியலுக்கு வருவது பல வருடங்களாக நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஒரு நடிகர் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை விஜயகாந்த்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தலைமை பண்பில் விஜயகாந்த்தான். கலைஞரோடு சேர்ந்து வளர்ந்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சாப்பிட வைப்பதற்கு அவரது உதவியாளர்கள் பிடித்து இழுப்பார்கள். ஏனென்றால் யாராவது உதவி கேட்டு வருவார்கள். இவரும் செய்துகொண்டே இருப்பார். யாருக்குமே இல்லை என்று சொல்லமாட்டார். அவரை மாதிரி கேஷுவலாக நடிக்கவே முடியாது" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ மறைமுகமாக விஜய்க்கு கஸ்தூரி அட்வைஸ் செய்கிறாரோ என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











