முன்பு மாதிரி இல்லை.. தனுஷை நினைத்தால்.. விரைவில் சட்ட நடவடிக்கை.. கஸ்தூரி ராஜா ஓபன் டாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் இப்போது குபேரா திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. அடுத்ததாக இட்லி கடை படமும் விரைவி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து ஹிந்தி படம் ஒன்றிலும், 5க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இயக்குநரும், தனுஷும் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என் ராசாவி மனசிலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதுதான் வடிவேலு நடித்து அவருக்கு வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, சோலையம்மா, மௌன மொழி, வீர தாலாட்டு உள்ளிட்ட படங்களை இயக்கினார். இருப்பினும் பெரிய வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதேசமயம் குறிப்பிடத்தகுந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.
பாடலாசிரியரும்கூட: கஸ்தூரி ராஜாவை பொறுத்தவரை இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர், இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்ட குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பழைய பாடலை ஒலிக்கவிட்டிருந்தார்களே; அந்தப் பாடலை எழுதியவர் கஸ்தூரி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல் மட்டுமின்றி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி, தூதுவளை இலை அரச்சு போன்ற பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

கஸ்தூரி ராஜா காட்டம்: இந்நிலையில் சாமக்கோடாங்கி என்ற படத்தை இயக்கவிருக்கிறார் அவர்.சூழல் இப்படி இருக்க சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாமக்கோடாங்கி என்ற படத்தை இயக்கவிருக்கிறேன். இந்தப் படத்துக்கான லொகேஷன் தேர்வு செய்யத்தான் சேலம் வந்திருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும். கதைதான் இந்தப் படத்துடைய கதாநயகன்.
இளையராஜா, தேவா போல் இல்லை: பஞ்சு மிட்டாய் சேலை கட்டி, ஒத்த ரூபாயும் தாரேன் என நான் எழுதிய மூன்று பாடல்களும் பிரச்னையில்தான் இருக்கின்றன. புதிய இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா போன்று இசையமைப்பதில்லை. இசையில் அவர்களது கவனம் செலுவதில்லை. இதனால்தான் பழைய பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அனுமதி கேட்டு அந்தப் பாடல்களை பயன்படுத்தலாம். ஆனால் அப்படி யாருமே கேட்பதில்லை. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.
முன்பு போல் இல்லை: முன்பு போல் முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் எல்லாம் இப்போது வருவதில்லை. இப்போது வெளியாகும் படங்களில் எலக்ட்ரானிக் இசைதான் வருகிறது. மீண்டும் மீண்டும் இளையராஜா, தேவா உள்ளிட்டோரின் பெயரைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மாமன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் நன்றாக ஓடுகின்றன. தமிழ் திரையுலகத்தில் கதைக்கெல்லாம் பஞ்சம் இல்லை. மக்களின் மன நிலை மாறியிருக்கிறது.
தனுஷை நினைத்தால்: சினிமா இப்போது சரியாக இல்லாததற்கு திட்டமிடல், தேடுதல் இல்லை என்பதுதான் காரணம். அது ஒரு அருமையான தொழில். திட்டமிட்டு செய்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். அப்படி லாபம் கிடைத்தால்தான் அவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள். அதையெல்லாம் இயக்குநர்கள் யோசிக்க வேண்டும். அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். அவரது வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











