எந்தப் படமா இருந்தாலும் மூணு நாள்தான், பாகுபலி வேணும்னா பத்து நாள் தாங்கும்! - கஸ்தூரிராஜா
சினிமா இன்றைக்குள்ள சூழலில் எந்தப் படமாக இருந்தாலும் மூன்று நாளைக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை என்றார் இயக்குநர் கஸ்தூரிராஜா.
பாலசுதன் என்ற புதியவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'துணிகரம்'. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குநர் பாலசுதனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஷான் கோகுல் மற்றும் தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, "இந்த குழுவினருக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. வெற்றிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தால், அதுவரை பொறுமையாக இருங்கள்.. நானும் அப்படி காத்திருந்து, இன்று கவண்' படம் மூலம் அப்படி ஒரு அங்கீகாரத்தை பெற்று, அதன்பின் இப்பொது இந்த மேடையேறி பேசும்போது கிடைக்கும் சந்தோசமே புதிதாக இருக்கிறது," என்றார்.
கஸ்தூரிராஜா
விழாவில் பேசிய கஸ்தூரிராஜா, "துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது... இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன்.. இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.

முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், 'அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க'ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம்... எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார்.. இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது,"என்றார்..
மேலும் அவர் பேசும்போது, "இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு.. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம்தான்.. சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான்.. பெரிய நடிகர்கள் படமும் மூணு நாள்தான்.. இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள்தான்.. அதனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு," என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, "உதவி இயக்குனராக இருந்து இயக்குனராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்குப் போனது இல்ல. ஊருக்குப்போய் ரெண்டு நாள் தங்கினா, என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலைன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க பையன் 20 வருஷமா வெட்டியா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான்.. ஆனா அது அவங்களுக்கு பெரிசா தெரியாது. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும். ரொம்பநாள் காத்திருக்கணும். திருப்பாச்சி ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன்.. சிவகாசி வெளியான அந்த தீபாவளிதான் நான் ஊர்ல கொண்டாடுனேன்," என்றார்.
வழக்கம்போல திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாக்குவார் தங்கம் இந்த மேடையிலும் தனது கருத்தை பதிவு செய்தார். மேலும் விஷால் வரும் மே-3௦ முதல் ஆரம்பிக்க இருக்கும் போராட்டம் குறித்து பேசிய அவர் அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை.. பார்க்கலாம்," என்றார்.
12 வருட கனவுப் படம்
படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலசுதன் பேசும்போது, "இது தனது பனிரெண்டு வருட கனவு," என்றார்.

சமீபத்தில் வெளியான 'இலை' படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் வெளியிடுகிறது..


Click it and Unblock the Notifications











