கதகளி சர்ச்சை: தணிக்கைக் குழு அதிகாரி 1 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் கதகளி படத்தின் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கக்கோரிய வழக்கில், மத்திய தணிக்கைக் குழு அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் கதகளி. இந்தப் படத்தில் வண்ணார், மருத்துவர் மற்றும் அருந்ததியர் சமூகத்துக்கு எதிராக வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்று மதுரை கோ.புதூரைச் சேர்ந்தவர் கே.பி.மணிபாபா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தமிழ்நாடு வண்ணார்பேரவை மாநில பொதுச்செயலாளரான மணிபாபா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் "நடிகர் விஷால் நடித்த கதகளி திரைப்படம் பொங்கல் விழாவின் போது வெளியானது.
இந்த படத்தில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமல்லாமல் மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வசனங்கள் வண்ணார், மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்துவதாகவும், அவமதிப்பதாகவும் உள்ளன.
இதன்காரணமாக இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்படங்களில் இதுபோன்ற வசனங்களை அனுமதிப்பது சமூக நீதிக்கு எதிரானது.
இந்த வசனங்களை தணிக்கை துறையின் பார்வைக்கு உட்படுத்தி தணிக்கை செய்யவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல், மக்கள் தொடர்புத் துறைச் செயலர், தணிக்கை வாரியம், காவல் துறை டி.ஜி.பி., திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் 1 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











