கத்தி விழாவை எதிர்த்துப் போராடிய வேல்முருகன், மாறன் உள்ளிட்ட 500 பேர் கைது
லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தடுத்து நிறுத்தக் கோரி போராடிய 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கத்தி படப் பாடல் வெளியீட்டுக்கு எதிராகவும், கத்தி திரைப்படத்தை தடை செய்யக் கோரியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் சார்பில் வியாழக்கிழமை அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்ற லீலா பேலஸ் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த லைக்காவின் ‘கத்தி' விளம்பரப் பதாதைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன், , புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி, தமிழ்தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், தமிழர் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி, முற்போக்கு மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











