ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக தீபாவளி அன்றே ரிலீஸான 'கத்தி'
சென்னை: தயாரிப்பாளரான லைக்காவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த கத்தி படம் ஒரு வழியாக அறிவித்தபடியே தீபாவளிக்கு ரிலீஸானது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளரான லைக்கா உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. லைக்கா இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரின் நிறுவனம், அதனால் அத்தகையவர் தயாரித்த படத்தை வெளியிட விட மாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன.

கத்தி தீபாவளி அன்று ரிலீஸாகும் என்று அறிவித்தபோதிலும் இந்த போராட்டங்களால் படம் ரிலீஸாகுமா ஆகாதா என்ற சந்தேகம் தீபாவளிக்கு முந்தைய நாள் அதுவும் மாலை வரை இருந்தது. இந்நிலையில் தான் படம் சம்பந்தப்பட்ட அனைத்தில் இருந்தும் லைக்காவின் பெயரை நீக்குவதாக அந்நிறுவனம் போராட்டக்காரர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து தான் படம் ரிலீஸாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.
தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டங்களால் படத்திற்கு இலவசமாக நல்ல விளம்பரம் கிடைத்தது என்றே கூற வேண்டும். இப்படி இத்தனை பிரச்சனைகளை தாண்டி கத்தி படம் அறிவித்தபடியே தீபாவளி அன்று ரிலீஸானது.
தமிழகம் தவிர கேரளா, கர்நாடகாவிலும் கத்திக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











