நெற்றிக்கண் உரிமையை கொடுக்கவே இல்லையே... ஆதாரம் இல்லாம பேசுவதா? விசு புகாருக்கு கவிதாலயா விளக்கம்
சென்னை: நெற்றிக்கண் படத்தின் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை என்று கவிதாலயா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினி நடித்து 1981-ஆம் ஆண்டு வெளியான படம் 'நெற்றிக்கண்'. இதை தனுஷ் ரீமேக் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து நடிகரும் இயக்குநருமான விசு, கதை உரிமை பற்றி விடியோ பேட்டி ஒன்றை வெளியிட்டார்.

தனுஷ் கேட்கவும்
அதில், ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது. அது உண்மையாக இருந்தால் தனுஷ் இதைக் கேட்கவும். உரிமைக்காக கவிதாலயா நிறுவனத்திடம் பேசியிருப்பீர்கள். பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, தெரிந்தோ தெரியாமலோ சில காரியங்களைச் செய்கிறார். நெகடிவ் உரிமை தன்னிடம் இருந்தால் கதை உரிமையையும் விற்கிறார்கள்.

பாலசந்தருக்காக
;சம்சாரம் அது மின்சாரம்; படத்தை ஒவ்வொரு மொழியிலும் விற்றபோது என்னிடம் சம்மதம் கேட்டு ஒரு தொகை கொடுப்பார் (ஏவிஎம்) சரவணன் சார். கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்டபோதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். இப்போது நெற்றிக்கண் விவகாரம்.

சம்மதம் வேண்டும்
தனுஷ், நீங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? உரிமையை கவிதாலயாவிடம் வாங்கிவிட்டீர்களா? அதன் திரைக்கதை, வசனகர்த்தா நான். எனக்குத் தெரியாமல் நெற்றிகண் உரிமையை அவர்கள் எப்படி விற்கலாம், இவர்கள் வாங்கலாம்? கதை அதிகாரம் எழுத்தாளரிடம்தான் உள்ளது. விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும்.

வாழைப்பழம் கூட
ரீமேக் உரிமையில் இயக்குநர்கள் பல லட்ச ரூபாய்களை வாங்குகிறார்கள். நான் இரண்டு வாழைப்பழம் கூட வாங்கவில்லை. தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் வருத்தப்படக் கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடுகிறேன் என்று இயக்குன்ர் விசு கூறியிருந்தார். இது பரபரப்பானது.

முழு காப்புரிமையும்
இந்நிலையில், விசுவின் கருத்துக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் புஷ்பா கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்றிக்கண் படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக் கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். அந்தப் படத்தின் முழு காப்புரிமையும் அதன் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது.

ஆதாரமற்றது
அதன் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் அணுகவில்லை. நாங்களும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் விசு, கதாசிரியர்
என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.

படத்தின் டைட்டில்
மேலும், விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக தில்லுமுல்லு படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது. கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்த மீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை மட்டுமே வழங்கி இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











