Kayal Anandhi: மகனுக்காக கயல் ஆனந்தி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் காரணமா?
சென்னை: 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி.
பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்த பின்னரே கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார்.
அப்போது முதல் கயல் ஆனந்தி என்றழைக்கப்படும் அவர் தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியுள்ளாராம்.

தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியது ஏன் என விளக்கம் கொடுத்துள்ளார் கயல் ஆனந்தி.
கயல் ஆனந்தி அதிரடி முடிவு
தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தமிழில் 2014ல் வெளியான பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகியானார். இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் கயல் ஆனந்தி என்றே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தொடர்ந்து அதர்வா ஜோடியாக சண்டி வீரன், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் அவரது ஜோதி கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இராவண கோட்டம் என்ற படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார்.
விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து இராவண கோட்டம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கயல் ஆனந்தி பங்கேற்று வருகிறார். அப்போது பேசிய அவர், தனது மகனுக்கு சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் கயல் ஆனந்தி.
இவர்களுக்கு சமீபத்தில் மகன் பிறந்த நிலையில், சாதியில்லா சான்றிதழ் வாங்கியதாக அவர் கூறியுள்ளார். தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியுள்ளேன். தன்னுடைய இந்த மாற்றத்திற்கு தான் படித்த புத்தகங்களும் சில நண்பர்களின் உரையாடல்களும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். கயல் ஆனந்தியின் இந்த முடிவை திரை பிரபலங்களும் ரசிகர்களும் வரவேற்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
கயல் ஆனந்தி தொடர்ச்சியாக வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் தான் நடித்து வருகிறார். அதனால், கயல் ஆனந்தியின் இந்த முடிவுக்குப் பின்னால் அவர்களுடனான உரையாடல்கள் இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











