Keerthy Suresh - என்னது அனிருத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணமா?.. தந்தை கொடுத்த விளக்கம் இதுதான்
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) அனிருத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கமளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.
மீண்டும் தமிழில்: இப்படிப்பட்ட சூழலில் தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ரகு தாத்தா படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அட்லீயின் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் காரணமாக தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
காதல்: கீர்த்தி சுரேஷை பற்றி எந்த கிசுகிசுவும் வெளியாகாமல்தான் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அவரை சுற்றி காதல் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் இசையமைப்பாளர் அனிருத்தை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதனை கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக மறுத்தார்.

தந்தை விளக்கம்: கீர்த்தி சுரேஷ் அவரது நண்பரை காதலிக்கிறார் என்று தகவல் வெளியானதும் அனிருத் - கீர்த்தியை பற்றிய தகவல் ஓய்ந்துபோனது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த பேச்சு எழுந்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து கீர்த்தியின் தந்தையான சுரேஷ் அளித்திருக்கும் விளக்கத்தில், "அனிருத் - கீர்த்திக்கு திருமணம் என்று வெளியாகியிருக்கும் செய்தியில் உண்மை இல்லை. இப்படி வெளியாவது இது முதன்முறையும் இல்லை. இதற்கு முன்புகூட இரண்டு பேருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன" என்றார்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பும் கீர்த்தியை பற்றி வரும் தகவல்களுக்கு விளக்கமளித்திருந்த சுரேஷ், "இப்படி ஆதாரமற்ற தகவலை பரப்பாதீர்கள். இதனால் நாங்கள் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











