Keerthy Suresh - தமிழில் பேச முடியாது.. தெலுங்கில் தான் பேசுவேன்.. திருப்பதியில் அடம்பிடித்த கீர்த்தி சுரேஷ்!
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) தமிழில் பேசுங்க மேடம் என சொன்ன பத்திரிகையாளருக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில் ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது.
அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன்ஸை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அவருக்கு ரசிகர்களாக மாறினர். இதனால் தொடர்ந்து ரெமோ, பைரவா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்:
நடிப்பு என்பது சாதாரணமில்லை. அதிலும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகப்பெரிய காரியம். அப்படி நடிக்கும்போது யாரை பற்றிய படமோ அவராகவே மாறி கூடு விட்டு கூடு பாய வேண்டும். மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் அதனை அசால்ட்டாக செய்தார்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான அதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பலரும் வாயடைத்து போயினர். சாவித்ரியாகவே கீர்த்தி சுரேஷ் மாறிவிட்டார் எனவும் பாராட்டு மழையில் நனைந்தார். அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.

குறைத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்:
அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனை காப்பாற்றும் வகையில் அதற்கு அடுத்த கதை தேர்வில் கவனமாகவே இருந்துவருகிறார் கீர்த்தி. இடை இடையே கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் பென்குயின், மிஸ் இந்தியா என பெண்களை மையப்படுத்தி வந்த கதையிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் என்றாலும் கீர்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தடுத்த படங்கள்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், போலா சங்கர் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

திருப்பதியில் தரிசனம்:
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பத்திரிகையாளர், தமிழில் பேசுங்க மேடம் என கேட்க, அவரை பார்த்து ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு, 'திருப்பதிலே இருக்கேனே' என நக்கலாக பதிலளித்தார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











