மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த மகாநடி...நினைவுகளை பகிரும் கீர்த்தி சுரேஷ்
சென்னை : நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மகாநடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படத்தில் சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.
நாக் அஸ்வின் இயக்கிய இந்த படம் 2018 ம் ஆண்டு மே 9 ம் தேதி ரிலீசானது. பலரின் மனங்களை கவர்ந்த மகாநடி படத்தில், சாவித்ரி மற்றும் ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டி இருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

3 ஆண்டுகளை கடந்த மகாநடி
தற்போது இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கப்பட்டது, இயக்கப்பட்டது மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய தகவல்களை கீர்த்தி சுரேஷ் தற்போது பகிர்ந்துள்ளார்.

நன்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்
இது பற்றி கீர்த்தி சுரேஷ் தனது பதிவில், நாகி அவர்களுக்கு அனைத்திற்கும் மிக்க நன்றி. உண்மையில் உங்களுக்கு தான் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். மிக கடினமான பணியை நீங்கள் சாத்தியமாக்கி உள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நினைவுகளை பகிர்ந்த கீர்த்தி
கதை தொடர்பாக டைரக்டர் தனக்கு அளித்த குறிப்புக்களையும், படத்தில் தனது அனுபவங்களையும் கூறி உள்ளார் கீர்த்தி சுரேஷ். கதையில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், அதை டைரக்டர் தெளிவுபடுத்திய விதம் பற்றியும் கீர்த்தி சுரேஷ் அழகாக கூறி உள்ளார்.

இரு மொழிகளில் சூப்பர்ஹிட்
தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியான இந்த படத்தை விஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

3 தேசிய விருதுகளை வென்ற படம்
66 வது தேசிய திரைப்பட விருதுகளில் மகாநடி படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த தெலுங்கு படம், சிறந்த நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இந்த படம் விருது வென்றது. மகாநடி படத்திற்கு பிறகு நடிப்பிற்கான கேரக்டர்களில் டைரக்டர்கள் பலரின் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











